சிங்காரப் பெண்ணொருத்தி…! | மாதங்கி

 சிங்காரப் பெண்ணொருத்தி…! | மாதங்கி

சிவப்பு சிக்னலின் நடுவே
சிங்காரப் பெண்ணொருத்தி…
வண்ணச் சரிகைச் சீலை ..
சன்னல் வைத்த ரவிக்கை…
உதட்டுச் சாயம்…
மையெழுதிய அகலக் கண்கள் …

கைதட்டிக் காசு கேட்கிறாள்…
பிச்சையாய்த் தோன்றவில்லை…
தந்ததும் தலையில் கைவைத்து
புன்னகையுடன் வாழ்த்துகிறாள்…
பொய்யெனத் தோன்றவில்லை….

பெற்று, விட்டவரினாலும் கூட
இனங்காண முடியா பேரழகுக்காரி ..
அவளுக்கென்று ஒரு இனம்…
அவளுக்கு மட்டுமே ஒரு கடவுள் …
அவளுக்கென ஓரிசை, நடனம்….

வழிபாடுகளில் மிஞ்ச முடியாத
பெருமை வாய்ந்தது எம்மானுடம்…
உயிரில்லா பொருளுக்காக
யாரையும் தொழும்…
மனிதம் வளர்க்காது
கடவுள் படைக்கும்…

இவளையும் கூட கடவுளாகக் “கொல்லும்”…
அர்த்த நாரீஸ்வரரென ஆலயங்களில்
சிறப்பு வழிபாடுகள் செவ்வனே ..
மனிதனை மனிதனாகக்
காண முடியாத பேரழகு மானுடம்…

இவளைத் தொழுதால்
புண்ணியாமாம்….
பணம், பொருள் அதிகரிக்குமாம்…
வியாபாரிகட்கு அதிர்ஷ்ட தேவதை..
அவள் பசியுணரா பலரின் பசிக்கும் கூட
இவள் தேவை…
எத்தனையோ தேடல்களுடன்
பலர் இவள் பின்னர்….

எல்லாவற்றையும் தாண்டி
அந்த உடலுக்குள்ளும் மனமுண்டு
கீறினால் உதிரம் தான் வரும்
அவளுக்கும் வலியுண்டு…
அவளுக்கும் பசியுண்டு ..
உயிரினத்தின் எல்லா இயற்கையும்
இவளுக்குண்டு….

பச்சை சிக்னல்…
எனைக்கடந்து
அடுத்த வாகனம் நோக்கி
சென்றுவிட்டாள்…
கைகளைத்தட்டிக் கொண்டு…
அவளைப்பற்றிய எண்ணங்களுடன்
நானும் கடந்து வந்துவிட்டேன்…..

கைத்தட்டல் ஓசை மட்டும்
இன்றும் செவிக்குள் ஓயாமல் ..!

– மாதங்கி

admin

4 Comments

  • அற்புதமான வரிகள். அழகு என்று சொல்வதற்கு அந்த அழகை ரசிக்கவும், பார்த்து வியக்கவும் தெரிஞ்சிருக்கனும். கவிஞர் தெரிந்து வைத்திருக்கிறார். பூவின் இதழ் கொண்டு மென்மையான எழுதப்பட்ட வரிகள் அருமை கவிஞர்.மாதங்கி 💐💐🙂🙂🙂

  • excellent .. கவிஞர் நிஜமாவே கலக்கிருக்காங்க .. இதல்லாம் ஆனந்த விகடனில் சொல்வனம் ன்னு கவிதை தொகுப்பு வருமே அதை விட ரொம்ப பிரமாதமா இருக்கு .. திரும்ப திரும்ப படிச்சிட்டு இருக்கேன் இந்த சமூகம் ஒரு காலத்தில் (சமயங்களில் இப்போதும்) கேலியாய் பார்த்தவர்களை இன்றைய நாகரீக சமுகத்தில் அவர்கள் போற்றுதலுக்குரிய வணங்குதற்க்குரியவர்களாக மாறியது மகிழ்ச்சியே .. அந்த மாற்றத்தை உங்கள் கவிதையில் காண முடிகிறது சாலையில் சாதாரணமாக கடந்து போகும் இது போன்ற நிகழ்வுகளை இது அங்கே தோன்றும் அந்த உணர்வை கண் முன்னே நிறுத்தி இருக்கீங்க இதே போல இன்னும் நெறைய எழுதுங்க வாழ்த்துக்கள் ..

  • அருமை மாதங்கி.. ❤️❤️

  • அருமையான கவிதை 😍

Leave a Reply to Periyar Kumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...