வரலாற்றில் இன்று – 11.05.2020 – தேசிய தொழில்நுட்ப தினம்

இந்திய அரசு 1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. மொத்தம் ஐந்து அணுவெடிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து சோதனையும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

இதன்மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும், அறிவியல் துறையில் சாதனை செய்தவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக இத்தினத்தில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சுத்தானந்த பாரதியார்

கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்ட சுத்தானந்த பாரதி 1897ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன்.

இவர் சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவது மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். சுத்தானந்தம் என பெயரிட்டு சித்தர் ஒருவர் இவருக்கு தீட்சை வழங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் மிகவும் பிரபலமானவை. மேலும், இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இவர் தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பல பாடல்களை இயற்றினார். பல சீர்திருத்தப் பணிகளையும் செய்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் ராஜராஜன் விருது இவரது பாரத சக்தி நூலுக்குக் கிடைத்தது.

ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மநேயர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்திய இவர் 1990ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1909ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி தமிழில் பல வெற்றிப் படங்களை தந்த அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!