விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நேற்று சர்வதேச கடற்படை அணிவகுப்பு நடைபெற்றது. இதில் இந்திய போர்க்கப்பல்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 71 போர்க்கப்பல்கள் பங்கேற்றன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை அணி வகுப்பு (ஐஎஃப்ஆர்) நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதலில் அவர் கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

அதன் பின்னர், இந்திய கடற்படை சார்பில் 45 போர்க் கப்பல்கள், அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகளின் 17 போர்க்கப்பல்கள் மற்றும் 7 வணிக மற்றும் எல்லை பாதுகாப்பு படை கப்பல்கள் என மொத்தம் 71 கப்பல்கள் 6 வரிசையில் அணிவகுப்பு நடத்தின.

இதன் பின்னர் இந்திய கடற்படை கப்பலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சென்று சர்வதேச கடற்படையின் அணிவகுப்பை பார்வையிட்டனர்.
