பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சிமாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, இன்று (பிப்.18) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் கூகுள் உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

முன்னதாக சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் மிகத் தெளிவான செய்தியுடன் வருகிறோம். நாங்கள் இந்தியாவுடன் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறோம். செயற்கை நுண்ணறிவு உடன் இந்தியாவுக்கு அசாதாரணமான பாதை மற்றும் வாய்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த மாற்றத்துக்குத் தேவையான உள்கட்டமைப்புகள், அவற்றை இயக்குவதற்குத் தேவையான ஆற்றலில் முதலீடு செய்தல், தரவுத் தொகுப்புகளை வழங்குதல், உள்ளூர் கூட்டாளர்களுடன் ஆராய்ச்சி நடத்துதல், இந்தியாவின் திறமைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்குதல் என எங்கள் பங்கு முழு அளவில் இருக்கும். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு லட்சியங்களுக்கு கூகுள் நீண்டகால அடிப்படையில் ஒத்துழைப்பை வழங்கும்’’ என தெரிவித்தார்.

முன்னதாக சுந்தர் பிச்சை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா திரும்பதியதில் மகிழ்ச்சி. எப்போதும் போல அன்பான வரவேற்பு இருந்தது. ஆவணங்களும் சிறப்பாக இருந்தன’’ என குறிப்பிட்டள்ளார்.

இந்த உச்சி மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை நமது நாட்டின் சேவை மற்றும் ஏற்றுமதிக்கு முதுகெலும்பாகவும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாகவும் இருந்து வருகிறது. இந்த துறைக்கு செயற்கை நுண்ணறிவு ஒரு மகத்தான சவாலையும் வாய்ப்பையும் முன்வைக்கிறது.

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அவுட்சோர்சிங் அலைகளால் இந்தியாவின் ஐடி துறை 2030-ம் ஆண்டுக்குள் 400 பில்லியன் டாலர்களை எட்டும் என்று ஏஐ சந்தை கணிப்புகள் தெரிவிக்கின்றன’’ என தெரிவித்துள்ளார்.

உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு தற்போது புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ‘அனைவருக்கும் நலன்; அனைவருக்கும் மகிழ்ச்சி’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மனித குலத்துக்கான செயற்கை நுண்ணறிவை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த உச்சி மாநாடு கருப்பொருளாகக் கொண்டுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் 110க்கும் மேற்பட்ட நாடுகள், 30 சர்வதேச நிறுவனங்கள், 45 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!