தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ஏ.சிவஞானம், இணை தலைமை தேர்தல் அதிகாரியாக ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இத்தேர்தலை மேற்பார்வையிட பொது, காவல், செலவின பார்வையாளர்களை ஏற்கெனவே நியமித்துள்ளது ஆணையம். தமிழகத்திலும் தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிஎம்டிஏ தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஏ.சிவஞானம், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை, தலைமைச் செயலர் என்.முருகானந்தம் நேற்று பிறப்பித்திருந்தார். ஏ.சிவஞானம், ஏற்கெனவே கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின் போது, இணை தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தமிழக அரசின் மின்னாளுமை முகமை இணை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ருதன்ஜெய் நாராயணன், இணை தலைமை தேர்தல் அதிகாரியாக (தகவல் தொழில்நுட்பம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
