சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இன்று முடிவடைகின்றன. தொடர்ந்து, 10-ம் வகுப்புக்கு 23 முதல் 28-ம் தேதி வரை செய்முறைத்தேர்வுகள் நடக்கின்றன. இந்தச் சூழலில், பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னையில் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

துறைச் செயலர் சந்திரமோகன், இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், அனைத்து முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
பொதுத் தேர்வு விடைத்தாள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
