சென்னை: புயல் சின்னம் எதிரொலியாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதைபோல பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.
குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புதன்கிழமை நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைகிறது. மேலும், இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 28, 29, 30 ஆம் தேதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை, புயல் சின்னம் எதிரொலியாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதைபோல பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.
வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
