அடுத்த 3 மணி நேரத்திற்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இந்நிலையில் மோந்தா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது மசூலிபட்டினத்தில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது என்றும், இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப்புயலாக மசூலிபட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோந்தா புயல் காரணமாக காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
மோந்தா புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. நேற்று காலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை, கத்திவாக்கத்தில் 9.5 செ.மீ, விம்கோ நகரில் 8 செ.மீ, மணலி, (மாதவரம், பெரம்பூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழைப்பொழிவு இருந்ததாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோந்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். மேலும் கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
