மகப்பேறு மருத்துவச்சிகள் நாள் கர்ப்பிணிப் பெண்களுக்கும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் மகப்பேறு மருத்துவச்சிகள் செய்யும் சேவையை கொண்டாடுவதற்காகவும், அவர்களின் பணியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு நெருக்கடியிலும் மகப்பேறு மருத்துவச்சிகள் மிக முக்கியமானவர்கள்” என்பது இந்த ஆண்டின் (2025) உலக சுகாதார அமைப்பின் கருப்பொருள் ஆகும். நெருக்கடியான சூழ்நிலைகளிலும், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் இடங்களிலும் மகப்பேறு மருத்துவச்சிகள் ஆற்றி வரும் இன்றியமையாத பங்கை இது எடுத்துக்காட்டுகிறது. மகப்பேறு மருத்துவச்சிகள் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவது, பிரசவத்தின்போது உதவி செய்வது, குழந்தை பிறந்த பின் தாயையும் சேயையும் கவனிப்பது எனப் பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் தாய் மற்றும் சேய் நலனில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்த நாளில், மகப்பேறு மருத்துவச்சிகளின் தன்னலமற்ற சேவையை நாம் அனைவரும் போற்றுவோம்.
தமிழ்த் தேசியத்தின் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள் விடுதலையொன்று வேண்டும்; அதுவும் தொல்குடி தமிழருக்கே முதலில் வேண்டும், என்று முழக்கமிட்டவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார். இவர் இந்திய அடையாளத்தோடு கூடிய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையென்பதை மறுத்து தமிழ்மொழி அடையாளத்தை முன்னிறுத்தியவரும் கூட! அவர் நடத்திய “ஒருபைசா தமிழன்” ஏடு இதற்கோர் சான்றாகும். 19.6.1907 முதல் தொடங்கப்பட்ட இவ்வேட்டை ஒரு கோடிப் பொன் மதிப்பிற்குரியது என்றார். முதல் இதழிலேயே ‘தமிழ்வாழ்த்து’ எனும் கவிதையில் அயோத்திதாசர் கூறியது பின் வருமாறு: “ஒரு பைசாத் தமிழனிவனு தவானென்பார் ஒரு பைசாத் தமிழருமை யறியாமாந்தர் ஒரு பைசாத் தமிழிலுண்மை யறிவாராயின் ஒரு கோடிப் பொன்னி தென்றுரைப்பர் மாதோ” பின்னர் ஓராண்டு கழித்து, 28.8.1908ஆம் ஆண்டில் ஒரு பைசாவை நீக்கி விட்டு “தமிழன்” என்ற பெயரில் இதழை நடத்தி வந்தார். தமிழகத்தில் அன்றைய காலத்தில் வடமொழியில் பெயர் சூட்டி தமிழ் இதழ்கள் வந்து கொண்டிருந்தன. அது மட்டுமின்றி இந்தியா, சுதேசமித்திரன் போன்ற இதழ்கள் பார்ப்பனீய கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்தும் எழுதி வந்தன. அயோத்திதாசர் இவற்றுக்கு எதிராக, “வேதங்களும் சாத்திரங்களும் எதற்கு? மக்களை சீர்திருத்தி செவ்வைப்படுத்துவதற்கேயாம். அத்தகைய வேதம் என்பது சகல மக்களும் பெறுவதாக இருப்பது நலமா? அவற்றைப் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது, என்பது நலமா?” என்று வினா எழுப்பினார். ஆதிக்க சாதியினர் ‘இந்து ஒற்றுமை’ பேசியபடி ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயன்ற போது, “சுத்த ஜலம் மொண்டு குடிக்க விடாத படுபாவிகளின் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள்! உங்கள் சத்துருக்கள் செய்த தீங்கினை மறந்து விடாதீர்கள்” என்று தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளும்படி எழுதினார். தமிழ் மறுமலர்ச்சியில் சைவ மதத்தின் பங்கை மறுப்பதற்கில்லை. ஆனால் அது தன்னளவில் பார்ப்பனீய வடமொழி எதிர்ப்போடு சுருக்கிக் கொண்டது. அயோத்தி தாசரோ தமிழ்மொழி மறுமலர்ச்சிக்கு பெளத்த மதத்தை துணைக் கருவியாக்கி போராடினார். அதன் மூலம் ஒடுக்கப்பட்டோர் விடுதலையைக் காண முற்பட்டார். 1881இல் ஆங்கில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதில் ‘பஞ்சமர்’ என்று பதிந்திடாது ‘ஆதித்தமிழன்’ என்று பதிந்திடும்படி வேண்டுகோள் விடுத்தார். 1785ஆம் ஆண்டில் அவரது பாட்டனார் பட்லர் கந்தப்பன் அவர்கள் வைத்திருந்த திருக்குறள், நாலடி நானூறு, அறநெறித் தீபம் முதலிய சுவடிகளை ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் துரை என்பவரிடம் கையளித்தார். இவற்றைக் பெற்றுக் கொண்ட எல்லீஸ் துரையோ தான் பொறுப்பு வகித்த தமிழ்ச்சங்கம் மூலம் அச்சில் கொண்டு வந்து தமிழர்களிடம் அவற்றைப் பரப்பிடலானார். இது மட்டுமல்லாமல் அயோத்திதாசர் பள்ளிகளில் திருக்குறள், திரிகடிகம், நாலடியார் போன்ற நூல்களை கற்க ஏற்பாடு செய்திடவும் கோரிக்கை விடுத்தார். சாதி, மதம் குறிக்காமல் மொழியின் பெயரால் அமைப்பு தோற்றுவிக்கும்படியும் வேண்டினார். “ஓர் பாஷையின் பெயரால் சங்கத்தை நிலை நிறுத்துவோமானால் ஆதவரும் ஆதி தமிழரென்பர், வன்னியரும் ஆதி தமிழரென்பர், நாடாரும் ஆதி தமிழரென்பர், வேளாளரும் ஆதி தமிழரென்பர்” என்றார். 1907ஆம் ஆண்டில் இக்கருத்தை அவர் வலியுறுத்தியதை நோக்கும் போது அனைத்து தமிழரும் சாதி விடுத்து தமிழராய் ஒன்றிணைய வேண்டுமென்பதே அவரின் இறுதி விருப்பமாக இருந்துள்ளது. சாதி ஒழித்து தமிழராய் தலை நிமிர அவரின் நினைவு நாளில் உறுதியேற்போம்.
பிரஞ்ச் மன்னன் மாவீரன் நெப்போலியன் பொனபார்ட் இறந்த தினம். நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படையெடுத்து, வெற்றிபெற்று பல நாடுகளை பிரான்சுக்குக் கீழ் கொண்டுவந்தான். நெப்போலியனின் லட்சியம், விவேகம் மற்றும் திறமையான இராணுவ உத்திகள் மூலம் அவரது பேரரசு விரிவடைந்தது. உலக வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற இராணுவ தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறான். அவனது பொன்மொழிகள் சில இதோ: “முடியாதது என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணப்படும் ஒரு சொல்.” “ஒரு உண்மையான மனிதன் யாரையும் வெறுப்பதில்லை.” “வரலாறு என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட பொய்களின் தொகுப்பு.” “தைரியம் என்பது அன்பைப் போன்றது; அதற்கு நம்பிக்கையே உணவு.” “சாவை நான் பொருட்படுத்துவதில்லை, ஆனால் தோல்வியுடனும் அவமானத்துடனும் வாழ்வது ஒவ்வொரு நாளும் சாவதற்குச் சமம்.” “ஒருவன் தன் உரிமைகளுக்காகப் போராடுவதை விட, தன் நலன்களுக்காகவே அதிகம் போராடுவான்.” “பயம் மற்றும் சுயநலம் மட்டுமே மனிதர்களை இயக்குகின்றன.” “ஒரு தலைவன் நம்பிக்கையை விற்பவன்.” “வெற்றி என்பது உலகில் மிகவும் நம்பத்தகுந்த பேச்சாளர்.” “சாதாரண மனிதர்கள் வாய்ப்புகளைக் காண சிரமப்படுகிறார்கள். வலிமையானவர்கள் அவற்றை உருவாக்குகிறார்கள்.”
பிரபல நகைச்சுவை எழுத்தாளரும், ஜனரஞ்சக எழுத்தின் முன்னோடிகளில் ஒருவருமான தேவன் எனப்படும் ஆர்.மகாதேவன் காலமான தினம் இன்று.. தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஆங்கிலப் பேராசிரியர் மூலம் இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்டது. சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.‘ஆனந்த விகடன்’ இதழில் 21 வயதில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை அதன் நிர்வாக ஆசிரியராக இருந்தார். விகடனில் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், 20-க்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதியுள்ளார். ‘தேவன்’ என்ற புனைப்பெயரில் எழுதினார். ‘துப்பறியும் சாம்பு’ இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு. அந்த வரிசையில் மட்டும் 50 கதைகள் எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வந்தன. ‘கோமதியின் காதலன்’ திரைப்படமாக வந்தது. ‘மிஸ்.ஜானகி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘கல்யாணி’, ‘மைதிலி’ போன்ற நாவல்கள் மேடை நாடகங்களாக அரங்கேறின. தான் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். அவை, ‘ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ என்ற புத்தகமாக வெளிவந்தது. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி இவர் விரிவாகப் படைத்த ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார். நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள், பொதுவாக மக்கள் வாழும் போக்கு, அன்றைய நாட்டு நிலவரம் ஆகியவை குறித்து மிக நேர்த்தியாகவும், எளிமையான நகைச்சுவையோடும் இருப்பது இவரது படைப்புகளின் சிறப்பம்சம். ‘குழந்தைகளின் அற்ப சந்தோஷங்கள், துக்கங்கள் மட்டுமல்லாது, வயதானவர்களின் மகா அற்ப சுக துக்கங்களைக்கூட அவ்வளவு அற்புதமாக எழுதக்கூடியவர் தேவன்’ என்று பாராட்டியுள்ளார் கல்கி. ஆங்கிலக் கதைகள் மட்டுமே படித்தவர்களைக்கூட தன் இயல்பான, நகைச்சுவை கலந்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் என்று போற்றப்பட்டார். ‘வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராக பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகின் சார்லஸ் டிக்கன்ஸ்’ என்று அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார். நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள், அபாரமான குடும்ப நாவல்கள் என அனைத்து வகைகளையும் அநாயாசமாக கையாண்டவர். பத்திரிகை துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். தனித்துவம் வாய்ந்த படைப்பாளி. கால் நூற்றாண்டு காலத்துக்கு கதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதிக் குவித்தார். உழைப்பால் உயர்ந்தவர், எழுத்தால் வளர்ந்தவர், பழகுவதற்கு எளிமையானவர், உலக விஷயங்களை ஜனரஞ்சகமாக, எதார்த்தமாக, கதைப்போக்காக மாற்றி உள்ளங்களில் புகுந்து குதூகலமடையச் செய்தவர் என்றெல்லாம் போற்றப்பட்ட தேவன் 44-வது வயதில் (1957) மறைந்தார்.
வைக்கோல், பட்டு ஆகியவற்றைக் கலந்து தொப்பி உருவாக்கும் புதிய முறைக்குக் காப்புரிமை பெற்று, அமெரிக்கக் காப்புரிமை பெற்ற முதல் பெண்ணாக மேரி கீஸ் ஆன நாள் அமெரிக்கக் கண்டுபிடிப்புகளின் வினையூக்கியாகக் குறிப்பிடப்படும், 1790இன் காப்புரிமைச் சட்டம், கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காகவே, பால் பாகுபாடின்றி குடிமக்கள் அனைவரும் காப்புரிமை பெற வழிவகுத்தாலும், அக்காலத்தில் (அமெரிக்காவிலும்) பெண்களுக்குச் சொத்துரிமை இல்லையென்பதால், பொதுவாகக் காப்புரிமைபெற பெண்கள்(உண்மையில் அவர்களுடைய கணவர்கள்!) அக்கறை காட்டவில்லை. அப்படியான நிலையில்தான் கீஸ் இந்தக் காப்புரிமையைப் பெற்றார். அவர் உருவாக்கிய தொப்பி(ஹேட்) மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. 1474இல் முறைப்படி காப்புரிமைகளை அளிக்க வெனிஸ் தொடங்கியபின், 1624இல் இங்கிலாந்தின் தனியுரிமைச் சட்டம் உருவாகி, அதன் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கும் சென்றது. அக்காலத்திய பதிவுகளின்படி வேறெங்கும் காப்புரிமை பெற்றதாகப் பெண்களின் பெயரே இல்லையென்பதிலிருந்து, உலகிலேயே காப்புரிமை ஒன்றைப் பெற்ற முதல் பெண்ணாக இவரே இருக்கக்கூடும். நோபல் பரிசு பெற்ற முதல் பெண்ணான மேரி கியூரி உள்ளிட்ட மிகச்சிலரே, பெண் கண்டுபிடிப்பாளர்களாகப் பெரிதும் அறியப்பட்டிருந்தாலும், 1812இல் சுழல் ரம்பத்தை உருவாக்கிய தபிதா பாபிட், நீர்வாழ் உயிரிகளைக் காணவும் ஆராயவும் உதவும் அக்வேரியத்தை 1832ல் உருவாக்கிய ஜீன் பில்ப்ரக்ஸ்-பவர், பனிக்கட்டியை உருவாக்க கருவிகள் இல்லாத 1843இல், கையால் இயக்கும் ஐஸ்கிரீம் எந்திரத்தை உருவாக்கிய நான்சி ஜான்சன், 1871இல் காகிதப்பை தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கிய மார்கரெட் நைட், பாத்திரம் கழுவும் கருவியை 1872இல் உருவாக்கிய ஜோசஃபின் காக்ரன், 1882இல் உயிர்காக்கும் படகை வடிவமைத்த மரியா பீஸ்லி, தீவிபத்தின்போது தப்பிப்பதற்காகக் கட்டிடத்திற்கு வெளியில் இரும்புப் படிக்கட்டை 1887இல் வடிவமைத்த அன்னா கானலி, தற்போது பயன்படுத்தப்படும் உடலுக்குள் மருந்து செலுத்தும் ஊசியை(சிரிஞ்ச்) 1899இல் உருவாக்கிய லெட்டீஷியா கியர் என்று அக்காலத்திலிருந்தே, மனிதகுல முன்னேற்றத்திற்குப் பங்களித்த பெண்களின் பட்டியல் மிகப்பெரியது. ஆனாலும், இப்போதுவரை (உதாரணத்திற்கு) அமெரிக்கக் காப்புரிமைகளில் 4 சதவீதம் மட்டுமே பெண்கள் தனித்துப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், பெண்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தவும், ஊக்குவிக்கவும் 1980இல் பெண்கள் வரலாற்று வாரம் தொடங்கிய அமெரிக்கா, 1987இலிருந்து அதை மாதமாக்கிக் கடைப்பிடிக்கிறது. இது, பிற நாடுகளுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது.
இரண்டாம் உலகப்போரின்போது, அமெரிக்காவில் பொதுமக்கள் பயன்படுத்தும் சர்க்கரையின் அளவுக்கு, ஒருவருக்கு ஒரு வாரத்துக்கு 230 கிராம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள் . பெரும்பாலும் சர்க்கரைக்கு இறக்குமதியை, குறிப்பாக ஃபிலிப்பைன்ஸ் நாட்டை அமெரிக்கா நம்பியிருந்த நிலையில், ஃபிலிப்பைன்ஸ் ஜப்பானால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சர்க்கரை விலை உயர்ந்தால், இது போரிடும் படைவீரர்களுக்கான உணவின் விலையையும் உயர்த்தும் என்பதால், பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க இந்தக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. முதலில் கொண்டுவரப்பட்ட உணவுப்பொருள் மீதான கட்டுப்பாடு சர்க்கரைக்கு என்றாலும், கட்டுப்படுத்தப்பட்ட முதல் பொருள் வாகன டயர்தான். தென்கிழக்கு ஆசியாவிலிருந்த இயற்கை ரப்பர் உற்பத்திப் பகுதிகள் ஜப்பானின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதால் இந்தத்தடை விதிக்கப்பட்டது. டயர் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவே 1942 ஜனவரி 1 முதல் பொதுமக்களுக்கான வாகனங்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. போர்க்காலத்தில் 56 கி.மீ. வேகத்துக்குமேல் வாகனம் ஓட்டக்கூடாது என்ற கட்டுப்பாடும் எரிபொருளுக்காக மட்டுமின்றி, டயர் தேவையைக் குறைப்பதற்காகவும்தான் விதிக்கப்பட்டது. அனைவருக்கும் சமமான ஒதுக்கீடு (உதாரணமாக சர்க்கரை), புள்ளிகள் அடிப்படையில் குறிப்பிட்ட பட்டியலில் உள்ளவற்றுள் (உதாரணமாக பல்வேறு உணவுப் பொருட்கள்) தேவையான அளவு பெறுவது, தேவையைப் பொருத்து மாறுபட்ட ஒதுக்கீடு (உதாரணமாக எரிபொருள்), சான்றிதழ் ஒதுக்கீடு (உதாரணமாக டயர் தேவை என்று விண்ணப்பித்து, சான்று பெறுதல்) என்று 4 வகையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. மிதிவண்டி, காலணிகள், துணி, தட்டச்சு எந்திரம், காஃபி என்று ஏராளமானவற்றுக்கு இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன், கார் தொழிற்தாலைகளில் கவச வண்டி முதலான ராணுவக் கருவிகள் தயாரிக்கப்பட்டன. போர்க்காலங்களில் இவ்வாறான கட்டுப்படுத்தப்பட்ட ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில், முதல் பதிவு செய்யப்பட்ட ஒதுக்கீடு, இந்தியாவில் சிப்பாய்க் கலகத்தின்போது நடந்த லக்னோ முற்றுகையில் செய்யப்பட்டுள்ளது. முதல் நவீன (கூப்பன் மூலமான) ஒதுக்கீடு முதல் உலகப்போரின்போது ஜெர்மெனியில் செய்யப்பட்டது.
உலக கார்டூனிஸ்ட் தினம்! கார்ட்டூனிஸ்ட்டுகளின் திறமையையும், அவர்கள் சமூகத்திற்கு வழங்கும் நகைச்சுவை மற்றும் கருத்துக்களை கொண்டாடுவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கார்ட்டூன்கள் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், சிந்தனையையும் தூண்டும் ஒரு முக்கிய கலை வடிவமாகும். இந்த நாளில், அனைத்து கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கும் எனது வாழ்த்துக்கள்! உங்கள் படைப்புகள் என்றும் நம்மை மகிழ்விக்கட்டும்.
தயாரிக்கப்பட்டுள்ள உலோகத்தின்(தங்கம், வெள்ளி) மதிப்பால் அன்றி, வெளியிடும் அரசு நிர்ணயிக்கிற மதிப்பைக் கொண்டிருக்கும் உறுதிமொழி நாணயங்கள் (ஃபியட் கரன்சி, உதாரணமாக காகிதப் பணம்!) என்பவற்றை உலகில் முதன்முதலாக வெளியிட்டவரான குப்லாய் கான், மங்கோலியப் பேரரசராகப் பதவியேற்ற நாள் ஜெங்கிஸ் கான் பல்வேறு மங்கோலியப் பழங்குடியினங்களை ஒருங்கிணைத்து, 1206இல் மங்கோலியப் பேரரசை உருவாக்கினார். உலக வரலாற்றில், தொடர்ச்சியான நிலப்பரப்பைக்கொண்ட மிகப்பெரிய பேரரசான இது, அவர் பேரனான குப்லாய் கானின் ஆட்சிக் காலத்தில், பசிஃபிக் கடலிலிருந்து கருங்கடல் வரையும், சைபீரியாவிலிருந்து ஆஃப்கானிஸ்த்தான் வரையும் பரவியிருந்தது. தொடர்ச்சியாக சுமார் இரண்டரைக் கோடி ச.கி.மீ. பரப்புக்குப் பரவியிருந்த இந்தப் பேரரசைவிட, உலகம் முழுவதும் குடியேற்றங்களைக்கொண்டு, தொடர்ச்சியற்ற மூன்றரைக்கோடி ச.கி.மீ. பரப்பைக்கொண்டிருந்த ஆங்கிலேயப் பேரரசு மட்டுமே பெரியது. குப்லாய் கான் பதவியேற்றபோது, ஜெங்கிஸ் கானின் வாரிசுகளால் நான்காகப் பிரிக்கப்பட்டாலும், அனைத்திற்குமான பேரரரசராக அவர் ஏற்கப்பட்டார். சீனா முழுவதையும் கைப்பற்றி, ஒருங்கிணைத்து ஆட்சி செய்த முதல் (ஹான்)சீனரல்லாத அரசர் குப்லாய்தான். இவரால் தோற்றுவிக்கப்பட்டதே சீனாவின் யுவான் அரச மரபு. அதற்காக அவர் டாடு(அல்லது கான்பாலிக்) என்ற பெயரில் நிர்மாணித்த தலைநகரம்தான் தற்போதைய பீஜிங். அந்த இடத்தில் ஏற்கெனவே ஒரு நகரமிருந்து, ஜெங்கிஸ் கான் படையெடுப்பின்போது 1213இல் அழிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு பெரிய நாடு என்பதால், தங்கம் போன்ற பொருட்களாக ஓரிடத்தில் வசூலிக்கப்படும் வரிகளை, தலைநகரிலுள்ள அரசின் கருவூலத்திற்கு எடுத்துச்சென்று, பின்னர் நிர்வாகச் செலவுகளுக்காக மீண்டும் நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்புவது சிரமமாக இருந்ததால், 1227இலேயே மங்கோலியப் பேரரசு காகிதப் பணத்தை அறிமுகப்படுத்திவிட்டது. ஆனாலும், அது தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கு மாற்றத்தக்கதாக இருந்ததால், உண்மையான மதிப்பு தங்கம், வெள்ளிக்கே இருந்தது. அந்நிலையை குப்லாய் கான் மாற்றியதால், அவரே உலகின் முதல் ஃபியட் கரன்சியை அறிமுகப்படுத்தியவராக ஏற்கப்படுகிறார். அனைத்துச் சமயங்களைப் பின்பற்றுவதையும் அனுமதித்த குப்லாய், அறிவியல், கலை, பண்பாடு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவமளித்ததார். வணிகத்துக்கு ஊக்கமளித்து, சாலைகள் உள்ளிட்ட போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தது, வணிகம் செழிக்க உதவியது. வணிக வழிகளைத் திறந்துவிட்டதால், வெளிநாட்டு வணிகமும் சிறந்ததுடன், அந்நிய உறவுகளும் பலமடைந்ததுடன், கடல் வணிகத்தின் மீதான வரிகளும் அரசுக்கு மிகப்பெரிய வருவாயை அளித்தன. வருவாய்க்காக, உப்பு உற்பத்தியில் அரசு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரில், அமெரிக்க வீரர்களும், ஜெர்மெனி வீரர்களும் ஓரணியில் நின்று போரிட்ட வினோதமான யுத்தமான இட்டர் கோட்டை யுத்தம் நடைபெற்ற நாள் இட்டர் என்பது ஆஸ்திரியாவிலுள்ள ஒரு கிராமம். 1938இல் ஆஸ்திரியாவை ஜெர்மெனி கைப்பற்றிய நிலையில், 1940இல் இக்கோட்டையை உரிமையாளரிடமிருந்து ஜெர்மன் அரசு குத்தகைக்குப்பெற்றதுடடன், 1943இல் பறிமுதல் செய்து, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கைதிகளை அடைக்கும் சிறையாக மாற்றிக்கொண்டது. ஃப்ரான்சின் இரண்டு முன்னாள் பிரதமர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட பல மிகமுக்கியமான கைதிகள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் 30இல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். வேர்மாக்ட் என்பதுதான் ஜெர்மெனியின் அதிகாரப்பூர்வ ராணுவம். சுட்ஸ்டாஃபல்(பாதுகாப்புப் படை – எஸ்எஸ்) என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருந்த நாஸிகளின் படையின், வாஃபன்-எஸ்எஸ் என்ற ஆயுதப்பிரிவு, துணை ராணுவப்படையாக, ராணுவத்துக்கு இணையாகச் செயல்பட்டதுடன், நாஸிகளின் இனப்படுகொலை உள்ளிட்ட மனிதநேயமற்ற நடவடிக்கைளைச் செயல்படுத்தும் அமைப்பாகவும் இருந்தது. ஹிட்லரின் இறப்புக்குப்பின் மேலும் தாக்குதல்களைச் செய்ய ஜெர்மன் ராணுவத்தின் தளபதிகள் ஆங்காங்கே மறுத்தாலும், எதிரிப் பகுதிகளுக்குள் கண்ணில் படுபவர்களையெல்லாம் சுடுவது, ஆண்களை மொத்தமாகக் கொல்வது என்று மிகமோசமான தாக்குதல்களை எஸ்எஸ் படையினர் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தனர். இட்டர் கோட்டைச்சிறையிலிருந்து இரண்டுபேர் தப்பிச்சென்று, அமெரிக்க ராணுவத்திடமும், ஆஸ்திரிய (ஃபாசிச) எதிர்ப்பியக்கத்திடமும் உதவி கோரினர். அமெரிக்க ராணுவமும் ஆஸ்திரிய எதிர்ப்பியக்கத்துக்கு ஆதரவாக, ஜெர்மன் ராணுவமான வேர்மாக்டின் ஒரு பிரிவும் வந்தனர். சிறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எஸ்எஸ் படையினர் வெளியேறிவிட, சிறையிலிருந்த பெரும்புள்ளிகள் உட்பட அனைவரும் அங்கிருந்த ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர். இந்த மூன்று படைகளும், தாக்க வந்த எஸ்எஸ் படையினரை எதிர்த்துப் போரிட்டதே இட்டர் கோட்டை யுத்தம். 100 வீரர்கள் பிடிபட்டு, தோற்கடிக்கப்பட்ட எஸ்எஸ் படையில் இறந்தவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை. சிறைக்கைதிகளில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். இரண்டு நாட்கள் கழித்து மே 8இல் ஜெர்மெனி சரணடைந்தது.
அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு உயிர்நீத்த வாட்டாக்குடி_இரணியன் நினைவு தினம்.. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கம் -தையல் அம்மாளுக்கு 1920, நவம்பர் 15 அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாக்குடி இரணியன். இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம். தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று கட்டிட வேலையிலும் தோட்டங்களிலும் வேலைபார்த்தார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள், மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது. பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி, வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது. நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது. பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது. இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார். 1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.”இரத்தம் தாருங்கள்; விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவ”த்தில் சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார். சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார்.1946ல் தொழிற்சங்கத்தின் முடிவுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலனுக்காக போராட்டம் நடத்தினார். மலேசிய முதலாளிகளும் ஆங்கிலேயர்களும் போராட்டத்தை ரவுடிகளைக் கொண்டு நசுக்க நினைத்ததை எதிர்கொள்ள “இளைஞர் தற்கொலைப் படை”ஒன்றை நிறுவினார். இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தார். 1948ல் மலேசியா பொதுவுடைமைக் கட்சியைத் தடை செய்தது. பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள் தலைமறைவானார்கள். தனது 28 வது வயதில் இரணியன் தனது சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத் திரும்பினார்.1947ல் விடுதலையடைந்த இந்தியாவில் நேதாஜிக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களின் காங்கிரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும் பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும் நிலப்பிரபுக்களாகவும் மாறியிருப்பதையும் கண்டு இதற்காகவா இந்திய விடுதலைக்காக நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம் அவருக்குள் உருவானது. இந்தியாவிலும் பொதுவுடைமைக்கட்சி தடைசெய்யப்பட்டிருந்த நேரம்.அவரது ஊரான வாட்டாக்குடியில் நிலப்பிரபுக்களின் கொடுமை விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்திருந்தது. ”சாணிப்பாலும் சவுக்கடி”யும் விவசாயத்தொழிலாளர்களுக்கு இயல்பான தண்டனையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து ”#விவசாய_சங்கம்” ஒன்றை உருவாக்கினார். நிலப்பிரபுக்களுடன் மோதி விவசாயத் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தினார். இதை பொறுக்க முடியாத நிலப்பிரபுக்கள் காவல்துறையின் உதவியுடன் இவர்மீது பல வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்ய முயன்றனர். மீண்டும் தலைமறைவு வாழ்க்கை தொடர்கதையானது. நிலப்பிரபுக்களும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும் காவல்துறையினர் உதவியுடன் இரணியனுடன் தொடர்புடையவர்களைக் கொலை செய்யத் தொடங்கினர். 1950 மே மாதம் 3 ஆம் நாள் இரணியனுடன் இணைந்து செயல்பட்ட சாம்பனோடை சிவராமனை காவல்துறை சுட்டுக்கொன்றது. வடசேரிக் காட்டில் மறைந்திருந்த இரணியனை காவல்துறை நெருங்கியது. காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் ஓடமுடியவில்லை. இரணியனையும் அவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும் வடசேரி சம்பந்தம் என்பவர் காவல்துறைக்குக் காட்டிக்கொடுத்தார். 1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இரணியனையும் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல்துறையினர் பிடித்தனர். ஆறுமுகத்தின் மீது வழக்கு ஏதுமில்லை என்பதால் அவரை விடுவித்து தப்பிக்க காவல்துறையினர் சொன்ன போதும் இரணியனை விட்டுச் செல்ல மறுத்துவிட்ட ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் இரணியனையும் காவல்துறை சுட்டுக்கொன்றது. வாட்டாக்குடி இரணியன், ஆம்லாப்பட்டு ஆறுமுகம், சாம்பனோடை சிவராமன் ஆகியோரின் உடல்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கூராய்வு செய்யப்பட்டன. பின்னர் பட்டுக்கோட்டை சுடுகாட்டில் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. தனது 30 வது வயதில் விவசாயிகளின்.தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்ட இரணியன் காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று மே 5 சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு உயிர்நீத்த வாட்டாக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன், ஆம்லாப்பட்டு ஆறுமுகம் இவர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு வருங்கால இளைஞர்களுக்கு சமர்ப்பணம்!