அடுத்த 62 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர் என தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
“பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது, மன்னராட்சி ஒழிக்கப்படவேண்டும் என்கிற ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்த போது என்னை அழைத்தவர் விஜய். சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது அதனை துறந்து அரசியலுக்கு வந்தவர் விஜய். தளபதி என்ற நிலையில் இருந்து தலைவர் என்று பரிமாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் விஜய். ஆளுங்கட்சிக்கு தூக்கத்திலும் இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது? என்பது பற்றிய எண்ணம் தான் உள்ளது.
தமிழக அரசியலுக்கு ஒரே மாற்று தவெக, ஒரே மாற்று தலைவர் விஜய். சாதி அரசியலை பேசி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாக கொண்டுள்ளனர். பெரியாரை முன்னிலைப்படுத்தி இன்றைய அரசியல் ஊழல்வாதிகளின் கையில் உள்ளது. 100 வருடங்கள் ஆகியும் பெரியார் கண்ட கனவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 75 வருடங்களாக கொள்கை பேசிய தலைவர்கள் என்ன மாற்றம் செய்தார்கள்?.
தமிழகத்தின் கடன் 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும். 15 வருடங்களாக 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள கட்சி அதிமுக. வெளிநாட்டில் பொருளாதாரத்தை உருவாக்கி கடன் வாங்குவர், தமிழகத்தின் கடனை உருவாக்கி ஊழல் செய்கின்றனர். சாதி அரசியல் பேசி தேர்தலில் வென்ற போலி கபடதாரிகள்.
சினிமா துறையில் பல தொழில்களை நடத்தி கொண்டிருக்கும் அரசாக இன்றைய அரசியல் உள்ளது. விஜயை பார்த்து நடிகர் என்று கூறுகின்றனர், ஆனால் என் தலைவரை பார்த்து நீங்கள் தான் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். எங்களிடம் பணம் இல்லை, உழைப்பும், மக்கள் ஆதரவுமே உள்ளது, மக்கள் பிரச்னைக்கு சிறை செல்லவும் தயார்.
தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்கிறீர்கள், சிறையும் செல்வோம், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் செல்வோம். அடுத்த 62 வாரத்துக்கு நாம்தான் எதிர்க்கட்சி. விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர். 1967ல் அண்ணா ஏற்படுத்தியது போல் 1977ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்தியது போல… மீண்டும் ஒரு பிளவு ஏற்படும். அதற்கு அஜென்டா ரெடி… பிளானிங் ரெடி. இன்னும் பல தலைவர்கள் தவெகவுக்கு வரப் போகிறார்கள். இன்னும் பல பூகம்பங்கள் அரசியலில் நடக்கப் போகிறது”
இவ்வாறு தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.