ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பள்ளி ஆசிரியர் மார்க் பொகெல் விடுதலை..!

ரஷ்ய சிறையில் நான்காண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பள்ளி ஆசிரியர் மார்க் பொகெல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியால் இந்த விடுதலை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஊழியராக பணியாற்றிய மார்க், அதன் பிறகு அங்குள்ள ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு போதைப் பொருள் வைத்திருந்ததாக அவரை ரஷ்ய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் பிறகு, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இரண்டு முறை கைதிகள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பட்டியலில் ஆசிரியர் மார்க் இடம்பெறவில்லை.மார்க்கை விடுதலை செய்வதற்காக, பைடன் அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற அதிபர் டிரம்ப் அதற்கான முயற்சி மேற்கொண்டார். அதன் பயனாக, ரஷ்யா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று, அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் உடன் நாடு திரும்பினார்.

உக்ரைன் போர் தொடங்கியதற்கு பிறகு, அமெரிக்க அதிகாரிகள் யாரும் ரஷ்யா செல்லவில்லை. இப்போதுதான் முதல்முறையாக கைதியை மீட்டு வருவதற்காக அதிபரின் சிறப்பு தூதராக ஸ்டீவ் விட்காப் ரஷ்யா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய சிறையில் இருந்து மார்க் விடுதலை செய்யப்பட்டதை, அவரது படத்துடன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அந்த சமூக வலைதளப் பதிவு, அமெரிக்கர்களால் அதிக எண்ணிக்கையில் பகிரப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *