திமுக பேரணி: ரஜினி, கமலை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

   குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் திமுக நடத்திய பேரணியை பாராட்டி ரஜினி , கமல் ஆகியோர் ஒரு வார்த்தைகூடப் பேசாததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, திமுக சார்பில் சென்னையில் திங்கள்கிழமை (டிசம்பர் 23) பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

     திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


     முன்னதாக,’இந்தப் பேரணியில் ஏதேனும் வன்முறை நிகழ்ந்தால் அதற்கு திமுக பொறுப்பேற்குமா என தாங்கள் கேட்ட கேள்விக்கு அக்கட்சியின் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே, இந்தப் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது’ என, இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, காவல் துறை தரப்பில் ,சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

      இதையடுத்து, திமுகவின் பேரணிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்து நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) இரவு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

       இதனிடையே, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக, டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், போலீஸார் தடியடி நடத்தியது குறித்து, மும்பையில் அண்மையில் நடைபெற்ற ‘தர்பார்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில், நடிகர் ரஜினியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

    அதற்கு, “இது திரைப்பட நிகழ்ச்சி. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த எனது கருத்தை பிறகு தெரிவிக்கிறேன்” என, ரஜினி மிகவும் சாமர்த்தியமாக பதிலளித்தார்.

   அவர் சொன்னதைப் போலவே, சில நாட்களுக்கு பிறகு (டிசம்பர் 19) அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “நாட்டில் இப்போது நடைபெற்றிருக்கும் வன்முறைகள் மனதிற்கு வேதனை அளிக்கின்றன” எனத் தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்தக் கருத்து, போராடினாலே அது வன்முறை எனப் பொருள்படும்படி உள்ளதாக பரவலாக விமர்சனம் எழுந்தது.

   இந்த நிலையில், திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின். திமுகவின் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் விதத்தில் அன்றைய தினமே (டிசம்பர் 19) ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
     

    அதில், ” உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு வன்முறை என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப்பதிவில் அவர், ரஜினியை தான் மறைமுகமாக சாடியிருப்பதாக பரவலாக பேசப்பட்டது.


    இப்படி இந்த ட்விட்டர் யுத்தம் ஒருபுறமிருக்க, சென்னையில் திமுக நடத்திய பேரணி எவ்வித வன்முறையும் இல்லாமல், மிகவும் அமைதியாக முடிந்தது அனைத்துத் தரப்பினராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

    ஆனால், இதுகுறித்து ரஜினி ஒருவார்த்தைகூட ஏன் பாராட்டவில்லை என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. அதாவது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது “எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் நாடு சுடுகாடு ஆகிவிடும்” என சொன்ன ரஜினி…

     குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின்போது நடைபெறும் வன்முறைகளுக்காக மனம் வருந்தும் ரஜினி… திமுக நடத்திய பிரம்மாண்ட பேரணி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்ததை பாராட்டி ஏன் ஒரு ட்விட்டோ, அறிக்கையோ வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது

   இதேபோன்று, “அழைப்புவிடுத்தால் திமுகவின் பேரணியில் பங்கேற்பேன்” எனச் சொன்ன, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் முறைப்படி அழைப்பு விடுத்த பிறகும் இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை. அத்துடன் அவரும் திமுக நடத்திய பேரணியை பாராட்டாதது ஏன் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!