‘சாப்பிட வர மறுத்து’… ‘தோழிகள் சென்றதும்’… ‘விடுதி அறையில்’… ‘மாணவி செய்த அதிர்ச்சி காரியம்’!
திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவி, விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நீலகுடி கிராமத்தில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஓசூரை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மைதிலி (19), ஒருங்கிணைந்த பி.எஸ்.சி., பி.எட் 2-ம் ஆண்டு, படித்து வருகிறார். பல்கலைக்கழகத்தின் விடுதியிலேயே தங்கி படித்து வரும்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று இரவு, இவருடன் விடுதி அறையில் தங்கியிருந்த தோழிகள், உணவு அருந்த மைதிலியை அழைத்துள்ளனர். ஆனால் அவர், தனக்கு உணவு உண்ண விரும்பவில்லை என கூறியதாகத் தெரிகிறது.
இதனால் மைதிலியை தனியாக விட்டுவிட்டு, சாப்பிடச் சென்றுவிட்டு தோழிகள் அறைக்கு வந்தபோது, அறை உள்பக்கம் தாழிட்டபடியே இருந்தது. கதவை தட்டியும் மைதிலி திறக்காததால், சந்தேகமடைந்த தோழிகள் ஜன்னல் வழியாக பார்த்தபோது மைதிலி, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் அங்குவந்த போலீசார், மைதிலியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மைதிலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது போல் சக மாணவிகள், தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது என மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். சென்னை ஐஐடியில் கேரளா மாணவி பாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மைதிலியின் தற்கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
