டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா

 டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா

வாரணாசிக்கு அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-இல்(அதாவது காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதம் 11-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில்) பிறந்தார்.

ராம்தத் குவார் – குசும்தேவி தமபதியினருக்கு இரண்டாவது திருமகனாக அவதரித்தார். இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் ஆகிய இரு சகோதரர்கள் உண்டு. குழந்தைப் பருவத்தில் யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர். காசியில் ஓடும் கங்கை ஆற்றாங்கரையில் உலாவுவதும், அங்கு குடிசையில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளிடம் நட்புடன் பழகுவதுமாக காலம் கழித்தார்.

வளர்ந்த பின்பு இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் ஆன்மிகப் பசியுடன் குருவைத் தேடியலைந்து, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கும் அடிக்கடி சென்று அம்மகான்களை தரிசித்து ஞான யோகத்தையும் தவத்தையும் கற்றார். பின்னர் கேரளாவில் உள்ள சுவாமி இராமதாசரின் ஆசிரமத்திற்கு சென்று பக்தி யோகத்தை கற்றார்.

ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், இரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி இராமதாசரிடமிருந்து பக்தி நெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு இராமதாசரிடமிருந்து “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்” எனும் மந்திர தீட்சை பெற்றார். யோகி ராம்சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார்.

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளொளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார்.

தங்க நாணயமயமான சிரிப்பு.. தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாக சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.

யோகி ராம்சுரத்குமார்….20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். ஆனாலும், அவர் திருவண்ணாமலையில் இருந்தபடி உலகமெங்கிலும் பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது இடையறாது நற்செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். நல்லவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார். தன்னை அண்டியவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.

திருவண்ணாமலை செங்கம் ரோடில் அவருடைய ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக நடக்கிறது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருடைய பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தந்தை என்பவர் குருவுக்குச் சமானம். குரு என்பவர் தந்தைக்கு நிகரானவர். நமக்கு ஞானத்தை வழங்குபவர்கள் எல்லோரையுமே குருவுக்குச் சமமாகவே வணங்க வேண்டும். வித்தையைக் கற்றுக் கொடுப்பவர் தந்தை என்றே சொல்கிறது சாஸ்திரம். பகவான் யோகி ராம்சுரத்குமார், ‘எனக்கு மூன்று தந்தைகள்’ என்று தன்னுடைய குருமார்களைப் பற்றிச் சொல்கிறார்.

சுவாமி அரவிந்தர், பகவான் ரமண மகரிஷி, பப்பா ராம்தாஸ் சுவாமிகள் என மூவரும் பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் மகானின் வாழ்வில், வழிகாட்டியவர்கள். இவர் மகான் என அறிந்து உணர்ந்து, அதன்படி பகவான் யோகி ராம்சுரத்குமாரை வழிநடத்தியவர்கள்.

திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், அந்த மிக விஸ்தாரமான மண்டபத்தில், சுவாமி அரவிந்தர், பகவான் ரமண மகரிஷி, பப்பா ராம்தாஸ் சுவாமிகள் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருப்பதை இன்றைக்கும் பார்க்கலாம். தரிசிக்கலாம்!

1952ம் வருடம். ராம்சுரத் குன்வர் கொஞ்சம் கொஞ்சமாக யோகியாக, மகானாக வெளியுலகுக்கு தெரியத் தொடங்கிய காலம் அது.

பகவான் யோகி ராம்சுரத்குமார், பின்னாளில், 1952ம் வருடத்தில் நிகழ்ந்ததைச் சொன்னார் இப்படி.

‘This Beggar is No Mind.

No Thinking.

No Planning.

No Conscious.

No Sense Of Right And Wrong.

No Sense Of Good and Evil.

All Washed away’.

அதாவது, ’இந்தப் பிச்சைக்காரனிடம் எந்த எண்ணமும் இல்லை. எந்தச் சிந்தனையும் இல்லை. எந்தத் திட்டமிடலும் இல்லை. அதேசமயம், பிரக்ஞையும் இல்லை. சரியுமில்லை; தவறுமில்லை. நல்லதுமில்லை; கெட்டதுமில்லை. அனைத்துமே துடைக்கப்பட்டன..’. என்கிறார்.

சரி… அதென்ன பிச்சைக்காரன்?

ராம்சுரத் குன்வர், ஆனந்தாஸ்ரமத்தில்… பப்பா ராம்தாஸ் சுவாமிகளின் அறிவுரைப்படியும் அருளியபடியும் ‘ஸ்ரீராம் ஜெய்ராம்… ஜெய ஜெய ராம்…’ எனும் ராமநாமத்தை உள்ளே சொல்லியபடியே இருந்தார் அல்லவா. ஏழு நாட்கள், ஏழு இரவுகள், ஏழு பகற்பொழுதுகள் என்று மோனநிலையில் இருந்தபடியே ராமநாமத்தில் இருந்தார்.

அதையடுத்து, ஆனந்தாஸ்ரமத்தில் இருந்த சிலருக்கு, கொஞ்சம் எரிச்சலோ இயலாமையோ… ராம்சுரத் குன்வரின் செயல்பாடுகள், மிகவும் தொந்தரவாக இருப்பதாக, பப்பா ராம்தாஸ் சுவாமிகளிடம் புகார் போல் தெரிவித்தார்கள். அங்கே ஏதும் அறியாத நிலையில், மோன நிலையில் இருந்த ராம்சுரத் குன்வரையும் புகார் கொடுத்தவர்களையும் மாறி மாறிப் பார்த்தார் பப்பா சுவாமிகள்.

ராம்சுரத் குன்வரை அழைத்தார். ‘நீ கிளம்பலாம்’ என்றார். அதைக் கேட்டு அதிர்ந்து போனார் ராம்சுரத் குன்வர்.

‘எங்கே கிளம்புவது? எங்கே செல்வது? எனக்கு வாழவே தெரியாது. பிச்சைதான் எடுக்கவேண்டும்’ என்று சுவாமிகளிடம் தெரிவித்தார் ராம்சுரத்குன்வர்.

‘பிச்சை எடு. நீ பிச்சைக்காரன் தான்.’ என்றார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

அங்கே சிறிதுநேரம் மெளனம்.

பிறகு சுவாமிகளே தொடர்ந்தார்.

‘’ஒன்றைத் தெரிந்து கொள், மிகப்பெரிய மரத்துக்குக் கீழே இன்னொரு மரம் வளராது. வளரமுடியாது. மரத்துக்குக் கீழே, புல்லும்பூண்டும்தான் வளரும். புரிகிறதா?’ என்று கேட்டார். புரிகிறது என்பது போல் தலையசைத்தார் ராம்சுரத் குன்வர்.

‘ஆமாம்… உன்னை பிச்சை எடு என்று சொல்லிவிட்டேன். எங்கே செல்லப் போகிறாய்?’ என்று அடுத்த கேள்வி கேட்டார் சுவாமிகள். சட்டென்று பதில் சொன்னார்… ‘அருணாசலம்’ என்று!

அவர் சொன்ன அருணாசலம்… திருவண்ணாமலை.

ராம்சுரத் குன்வரின் பதிலைக் கேட்டு, மகிழ்ந்து போனார் சுவாமிகள். அவரை ஆசீர்வதித்தவர். தன் தோளில் இருந்த ‘வுல்லன் சால்வை’யை அவர் தோளில் அணிவித்தார். ‘இது உன்னுடனே இருக்கட்டும். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என அருளினார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

அந்த சால்வையை எப்போதும் அணிந்து கொண்டே இருந்தார் ராம்சுரத் குன்வர். பகவான் யோகி ராம்சுரத்குமார் என்று உலகத்தாரால் அறியப்பட்டு, வணங்கி வந்த வேளையிலும் அவரிடம் பப்பா ராம்தாஸ் சுவாமிகள் வழங்கிய சால்வை தோளில் இருந்தது. எல்லாத் தருணங்களிலும் அந்தச் சால்வையைப் போர்த்திக் கொண்டே எல்லா இடங்களுக்கும் வலம் வந்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

திருவண்ணாமலை என்பது மலை சார்ந்த பகுதி. ஆகவே குளிர்காலத்தில் கிடுகிடுக்க வைத்துவிடும். அதேசமயம் அது… அக்னி ஸ்தலமும் கூட. கோடை காலத்தில் சுட்டெரிக்கும். வியர்த்துக் கொட்டும். ஆனாலும் கடும் வெயில் காலத்தில் கூட, குரு வழங்கிய சால்வையைப் போர்த்தியபடியே இருந்தார் பகவான்!

1952ம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களை பகவான் விவரிக்கும் போது, இன்னொன்றையும் சொன்னார்.

‘’என் குருவுக்கு கோடி வந்தனங்கள்’’ என்று பப்பா ராம்தாஸ் சுவாமிகள் குறித்து வணங்கிச் சொல்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

This Beggar Died at The Lotus Feet Of Swamy Ramdoss, in 1952. Pappa Ramdoss Killed The Beggar.

All That Remain is Father Alone. Nothing Else. No One Else’ என்று விவரிக்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

1952ம் வருடம், சுவாமி ராம்தாஸின் பாதக்கமலங்களில் சரணடைந்திருந்த வேளையில், இந்தப் பிச்சைக்காரன், செத்துப் போனான். சுவாமி ராம்தாஸ் இந்தப் பிச்சைக்காரனைக் கொன்றுபோட்டார். அதன் பிறகு, எதுவுமில்லை; எவருமில்லை!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.


நம் உலகுக்காகப் பிரார்த்திப்போம். உறவுகளுக்காகப் பிரார்த்திப்போம். செடிகொடிகளுக்காகவும் ஆறுகுளங்களுக்காகவும் அகிலத்து மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்.

இணையத்தில் படித்தது

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...