மாமன்னன் சக்ஸஸ் மீட்..!!!! – தனுஜா ஜெயராமன்.

 மாமன்னன் சக்ஸஸ் மீட்..!!!! – தனுஜா ஜெயராமன்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் ‘மாமன்னன்’.

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படக் குழுவினர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இந்த ‘மாமன்னன்’ படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படத்தை மக்களுக்கு கொண்டு சென்றுள்ளீர்கள். எனக்கு முதல் படம் போலக் கடைசி படமும் வெற்றி. படம் இன்றும் பல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாடலாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் மாரிதான் நடன இயக்குநராகவும், சண்டைக் காட்சி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
இடைவேளை சண்டைக் காட்சிகள் அனல் பறந்தது படத்தில் மட்டுமல்ல.. படப்பிடிப்பே தளத்திலும் அப்படித்தான் இருந்தது. படப்பிடிப்பின்போது எல்லோருக்குமே நிறையக் காயங்கள் ஏற்பட்டன. சண்டை காட்சிகள் எல்லாமே ரியலாக இருந்தது. படத்தில் இருக்கும் அழுத்தம் படப்பிடிப்பில் இல்லை. எல்லோரும் ஜாலியாகக்தான் படத்தில் நடித்தோம்.

வடிவேலு அண்ணன் நடித்த காட்சிகளை பார்த்த பிறகுதான், எனக்கு இந்த கதையைப் பற்றியே புரிந்தது. உண்மையிலேயே இந்தப் படத்தை அவர்தான் தாங்கியுள்ளார். பஹத் பாசில் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. தேசிய விருது பெற்ற நடிகர். இந்த ‘மாமன்னன்’ படத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றது அவரது நடிப்பு.
ரஹ்மான் சாருக்கு நன்றி. படத்தின் கதையை போல இசையும் பெரும் வலு சேர்த்தது. செண்பகமூர்த்தி சாருக்கு நன்றி. ரெட் ஜெயன்டை அவர் நன்றாக வழி நடத்திச் செல்கிறார். என் படத்தையும் கொண்டு சேர்த்ததற்கு நன்றி.  உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவில் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்…” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “மூன்று படங்கள். மூன்று வெற்றிகள். அனைத்தையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், எனக்குத்தான் இன்னமும் பதற்றம் குறையவில்லை. இந்தப் பதற்றம் குறையும் நாளில் நான் மன நிம்மதி அடைந்துவிடுவேன்.
இந்தப் படம் ஒரு கூட்டு முயற்சி. இப்படத்தில் நான் என்ன நினைக்கிறேன்.. என் வலி என்ன.. என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொண்டு அனைத்து கலைஞர்களும் ஒத்துழைத்து ஒரு சிறப்பான படைப்பைத் தந்தனர். எல்லோரும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். தங்களை நிரூபிக்க வேண்டும் என்பதைவிட மாரி ஜெயிக்க வேண்டும். மாரியின் கருத்து ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துதான் வேலை பார்த்தார்கள். அத்தனை கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.
இந்த ‘மாமன்னன்’, ஒரு நாவலாக எழுத வேண்டும் என்று நான் நினைத்திருந்த படைப்பு. இதை எடுக்க முடியாது என்றே நினைத்திருந்தேன். ஆனால் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தால்தான் இது சாத்தியமாயிற்று. உதயநிதி சாருக்கு என் மீது இருக்கும் அன்பு மிகப் பெரியது. அவர் கூப்பிட்டபோது, “இவர் செய்யும் படங்கள் வேறு வகை. நாம் செய்யும் படங்கள் வேறு வகை எப்படி ஒத்து வரும்..?” என்னும் பயம் எனக்குள் இருந்தது. என்னைச் சந்தித்தபோதே அந்தத் தயக்கத்தை அவர் உடைத்துவிட்டார்.
இந்தப் படத்தில் நடித்த கலைஞர்கள் சிலருக்கு டயலாக் இல்லை. ஆனாலும், என் மீதான அன்பிற்காக மட்டுமே செய்தார்கள். இந்தப் படத்தின் இடைவேளை காட்சிதான் இந்தப் படத்தின் மையப் புள்ளி. அதிலிருந்துதான் இந்தப் படம் தொடங்கியது.
வடிவேலு சார் என்னை நம்பி நான் சொன்னதை உள் வாங்கி நடித்தார். அவருக்கு நன்றி. பகத் சார் இன்னும் இன்னும் காட்சியை மெருகேற்றுவார். அவர் எப்போதும் “கேரளாவில் என் வீடு உனக்காக திறந்திருக்கும்…” என்று சொன்னார். அவருக்கு நன்றி. உதய் சார் என் மீது காட்டும் அன்பு மிகப் பெரியது. என்றென்றைக்கும் அவருடனான உறவு தொடரும்.
திரைப்படங்கள்தான் என் அரசியல், என் வலி, என் வரலாறு அதைத் தொடர்ந்து என் திரைப்படங்களில் பேசிக் கொண்டே இருப்பேன். படத்தின் மீது சில சர்ச்சைகள் இருந்தது. ஆனால், மக்கள் படத்தை அரவணைத்துக் கொண்டார்கள்…” என்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசும்போது, “இப்படி ஒரு வெற்றி விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, படக் குழுவினர் அனைவருக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம். இயக்குநர் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி. வீடியோ காலில் பேசி கதை சொல்லி இன்று இந்த வெற்றியில் நிற்கிறது, உதயநிதி சாருக்கு நன்றி. 
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. பெரிய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது ஆனால் அதைத் தகர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் சாருக்கு எனது வாழ்த்துக்கள். இனிமேல் வரும் இளம் இயக்குநர்களுக்கு இது ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் அதற்கு நன்றி.

உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டனர். படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. மீண்டும் ஒரு வெற்றி விழாவில் சந்திப்போம்.” என்றார்.

இந்நிகழ்வினில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பேசும்போது, “இந்த ‘மாமன்னனின்’ இந்த வெற்றியில் பங்கு கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. ஒளிப்பதிவு பற்றி எல்லோரும் குறிப்பிட்டார்கள். படத்தை பாராட்டி வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. உதயநிதி சார் மிக ஆதரவாக இருந்தார். படத்திற்காக கேட்டது அனைத்தும் கிடைத்தது. எல்லோருமே நன்றாக நடித்திருந்தார்கள். படத்தை பாராட்டி வெற்றியடையச் செய்த அனைவருக்கும் மீண்டும் நன்றி..” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசும்போது, “மாமன்னன்’ என் கேரியரில் மிக முக்கியமான படம். உதய் சார் வாழ்வில் மிக முக்கியமான படம். மாரி செல்வராஜ் சார் எப்போதும் பதட்டமாகவே இருப்பார். மிகப் பெரிய நடிகர் கூட்டத்தை கட்டி இழுத்து வர வேண்டும். நான் கம்போஸ் செய்வதை வேண்டாம் என்று சொல்லிவிடுவார். இந்த படத்தில் எல்லாமே ஒரிஜினல். ஒரிஜினலாக அடி வாங்கித்தான் ஆக்சன் சீக்குவன்ஸ் எடுத்தோம். உதய் சார் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். வடிவேலு சார் மலைமேல் நின்று கண்கலங்கும் காட்சியில் எல்லோரும் கலங்கி விட்டார்கள்…” என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...