பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசாக வழங்கினார் கமல்ஹாசன்

 பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசாக வழங்கினார் கமல்ஹாசன்

 கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா என்பவர் பணியாற்றி வந்தார். கோவையில் பயணிகள் பேருந்தை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் ஷர்மிளா பெற்றுள்ளார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஷர்மிளா பணியில் இருக்கும் போதே அங்கு சென்று ஷர்மிளாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஷர்மிளா இயக்கும் பேருந்தில் ஏறி பயணித்ததுடன் அவரை பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனையடுத்து கனிமொழியிடம் டிக்கெட் கேட்டது தொடர்பாக ஷர்மிளாவுக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தன்னை பேருந்து உரிமையாளர்கள் விமர்சித்ததாக ஷர்மிளா குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். மேலும் ஷர்மிளாவை பணி நீக்கம் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையாகின. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.  தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.  கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். என்று தெரிவித்துள்ளார்.

கமலின் அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் இதன் பின்னால் அரசியல் கணக்கு இருக்கிறதா என்ற விவாதங்களும் தொடங்கியுள்ளன. “மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சென்னை, கோவை போன்ற நகர்ப்புறங்களில் ஆதரவு இருக்கிறது. இதனாலே கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கினார். கோவைக்கு அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் விரைவில் கோவைக்கு அவர் விசிட் அடிப்பார். அதற்கு முன்பாக கோவையைச் சேர்ந்த ஷர்மிளாவுக்கு கார் கொடுத்து தனது அரசியல் நடவடிக்கையை தொடங்கியுள்ளார்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...