சிகரம் செந்தில்நாதன் பாதை, பயணம், படைப்புலகம்’ 80வது ஆண்டு மலர்

 சிகரம் செந்தில்நாதன் பாதை, பயணம், படைப்புலகம்’  80வது ஆண்டு மலர்

வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘சிகரம் செந்தில்நாதன் பாதை, பயணம், படைப்புலகம்’ என்கிற  தலைப்பில் சிறப்பு மலர் சென்னை எழும்பூரில் உள்ள அரங்கில் வருகிற
28-10-2022 அன்று வெளியாக இருக்கிறது.

கட்டுரைகள், புதினங்கள், திறனாய்வு நூல்கள், சமய நூல்கள் என்று பல துறைகளிலும் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்தவர் செந்தில்நாதன்.

1967- ல் ‘தமிழ்ச் சிறுகதைகள்- ஒரு மதிப்பீடு’ என்ற விமர்சன நூல்தான் இவருடைய முதல் படைப்பு. 1970- ல் வழக்குரைஞராகப் பதிவு செய்து 1974இல் வழக்குரைஞர் தொழிலைத் தனியாகத் தொடங்கி நீதிமன்றப் பணிகளைத் தொடங்கினார். 

வாசிப்பின் தொடர்ச்சியாக1975-ல் ‘சிகரம்’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் தான் அரசாங்கம் அவசர நிலையை பிரகடனம் செய்தது. இந்தச் சமயத்தில் சிகரம் பத்திரிகை மூலம் முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் தங்கள் கருத்துக்களை வெளிக்கொணர்ந்தனர். ஆனால் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்கு இழப்பீடு அதிகமானதால் ஐந்து ஆண்டுகளில் சிகரம் பத்திரிக்கை நின்றுபோனது.

சிகரம் இதழில் எழுதி வந்த எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, செந்தில்நாதன் மக்கள் எழுத்தாளர் சங்கத்தினைத் தொடங்கினார். மக்கள் எழுத்தாளர் சங்கத்தினை காலத்தின் தேவைக்கேற்ப, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு இணைத்து பணிகளை விரிவாக்கிக் கொண்டார்.

வாசிப்பின் வழியே அவர் கற்ற பண்பாடு வழக்குரைஞர் தொழிலும் தொடர்ந்தது.

வழக்குரைஞர் தொழிலை ஒரு வருவாய் ஈட்டும் தொழிலாக பாவிக்காமல் தன் சக எழுத்தாளர்களுக்கு ஏற்படும் சட்ட சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் இடமாக மாற்றினார். இவர் பல சட்டப் போராட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார். அதில் மிக முக்கிய மான வழக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய ‘மாதொருபாகன்’ என்ற நாவலின் மேல் தொடுக்கப்பட்ட சட்ட விரோத வழக்குதான். அந்த வழக்கை எதிர்த்து வாதாடி வெற்றி பெற்றதை ஒரு வரலாற்று நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். இது போல் பல வழக்குகளை நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

புதுமைப்பித்தனின் நூல்களைத் தனியொருவர் சொந்தக் கொண்டாடியபோது எழுத்தாளர் வல்லிக்கண்ணன் தலைமையில் போராடி அவரது நூல்களை சட்டப்படி நாட்டுடைமையாக்கத் துணைநின்றார் செந்தில்நாதன்.

அதேபோல் பெண்ணிய எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் தன் உறவினரால் ஏமாற்றப்பட்டு தன் சொத்துக்களை இழந்தபோது அவருக்காகச் சட்டப் போராட்டம் நடத்தி அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கி ராஜம் கிருஷ்ணனுக்கு நீதி வழங்க உதவினார்.

எழுத்தாளர் என்.ஆர்.தாசன்  எழுதிய கதையை உரிமை பெறாமல் ‘அபூர்வ ராகங்கள்’ என்கிற திரைப்படமாக இயக்கினார் பாலச்சந்தர். அதற்கு வழக்குத் தொடுத்து உரிமையைப் பெற்றுத் தந்தார் செந்தில்நாதன்.

எழுத்தாளர் கந்தர்வன் அனுமதி பெறாமல் அவரது படைப்பை இந்திய அரசு சார்பில் ஆவணப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதற்கும் வழக்குத் தொடுத்து கந்தர்வனுக்கு நிதி உதவி பெற்றுத் தந்தார் செந்தில்நாதன்.  

மூத்த வழக்கறிஞர் செந்தில்நாதன் அரை நூற்றாண்டு வரலாறு கொண்டவர். எதையும் யாரையும் நல்லுறவோடு அணுகி நியாயத்தை நிலைநாட்டப் பாடுபட்டவர். அவர் களப்பணி கண்டு பல தலைவர்களோடும் நெருங்கிப் பழகியவர். அவர் கலைஞர் கருணாநிதி, தோழர்கள் ஜி.ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், ஈரோடு தமிழன்பன், வல்லிக்கண்ணன், தி.க.சி., கு.சின்னப்பபாரதி நீதியரசர்கள் சந்துரு, அரிபரந்தாமன், மற்றும் பெ.மணியரசன், ஸ்டாலின் குணசேகரன், சந்தியா நடராஜன் என பலர் கருத்துக்களை இந்த மலரில் பகிர்ந்திருக்கிறார்கள்.

சட்டம், இலக்கியம், களப்பணி என்ற நோக்கங்களுடன் தன் வாழ்வைத் தொடங்கும் இளைஞர்களுக்கு செந்தில்நாதனின் வாழ்வியல் ஒரு வகுப்பு. இதை வரலாறாக வரைந்திருக்கிறது இந்த மலர் தொகுப்பு.

தன் இலக்கியத் திறனாய்வின் வழியாகவும் வழக்கறிஞர் பணி வாயிலாகவும் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி முதல் திரைப்பட இயக்குநர்கள் பாலச்சந்தர், டிராஜேந்தர் வரை குறுக்கு விசாரணை செய்த வழிக்கறிஞர் செந்தில்நாதனை வாசகர்கள் சார்பாக மலர் தொகுப்பாளர் எழுத்தாளர் வே.குமரவேல் குறுக்கு விசாரணை செய்த நெடிய இலக்கிய நேர்காணலும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

சிகரம் செந்தில்நாதன் 80வது பிறந்தநாள் சிறப்பு மலரில் கட்டுரை எழுதியுள்ள சான்றோர் பெருமக்கள்.

மார்க்சிஸ்ட் தலைவர்கள் ராமகிருஷ்ணன்,  பாலகிருஷ்ணன், எழுத்தாளர், ப.ஜெயப்பிரகாசம், கவிஞர் ஈரோடு தமிழன்பன், தினமணி கட்டுரையாளர் முனைவர் பிச்சை, வரலாற்று எழுத்தாளர் ச.ராஜமாணிக்கம், மக்கள் சிந்தனை பேரவை, தலைவர் ஸ்டாலின் குணசேகரன், மறுமலர்ச்சி தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், சமய சொற்பொழிவாளர் மு. பெ. சத்யவேல் முருகன்,  தமிழ் அறிஞர்  புலவர் பா வீரமணி, சன் டிவி வீரபாண்டியன், பதிப்பாளர் எழுத்தாளர் சந்தியா நடராஜன், தமிழ் தேசிய கட்சி தலைவர் பெ. மணியரசன், சமூக ஆர்வலர் மயிலை பாலு, ஆசிரியர் (முகம்) இளமாறன், எழுத்தாளர் ஜன நேசன், கவிஞர் சி. எம். குமார், கவிஞர் பாரதி விஜயன்எழுத்தாளர் இரா.தெ.முத்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, செந்துறை தமிழ் சங்கம் ரகுவம்சன், அரியலூர் மக்கள் சிந்தனை பேரவை,  சுப்பிரமணியன், எழுத்தாளர்  நா.வே.அருள், த.மு.எ.ச கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் பால்கி, பாச்சுடர் வளவ.துறையன், புலவர் பாலமுருகு, வழக்கறிஞர் ரவி, செந்துறை தமிழ்ச் சங்கம் செயலாளர் வே.குமரவேல் மற்றும்  தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் சிகரம் செந்தில்நாதன் அவர்கள் எழுத்தாளர் குமரவேல் அவர்களுக்கு வழங்கிய சிறப்பு பேட்டி- நெடிய நேர்காணல். மற்றும் அவர் பற்றிய கட்டுரைகள், காலச்சுவடுகள் என அவரைப் பற்றிய முழுமையான வாழ்க்கைத் தொகுப்பாக இந்த மலர் வெளியாகிறது.

செந்தில்நாதன் ஏழு கட்டுரைத் தொகுப்பு நூல்களும், இரண்டு புதினங்களும், ஐந்து திறனாய்வு நூல்களும், 13 சமயம் மற்றும் புதிய சிந்தனை நூல்களும் எழுதியுள்ளார்.

மங்களம் நாவல் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த நாவல் என்று தமிழ்நாடு அரசின் விருது பெற்றது.

இந்த நாவலை ஆய்வு செய்து சுரேஷ் மற்றும் சாந்தி என்ற இருவர் M.Phil பட்டம் பெற்றுள்ளனர். நெல்லை இந்துக் கல்லூரியில் இது பாடமாக வைக்கப்பட் டுள்ளது. இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, வெளியிடப்படாமல் உள்ளது.

2009 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அறக்கட்டளையும்,  அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து ‘மக்கள் கவிஞர்’ விருதை வழங்கினார்கள்.

இந்த மலரின் விலை ரூ.480 வெளியீட்டு விழாவில் ரூ.360க்குப் பெறலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...