வேலு நாச்சியாருக்கு உதவிய விருப்பாச்சி கோபால நாயக்கர்

 வேலு நாச்சியாருக்கு உதவிய விருப்பாச்சி கோபால நாயக்கர்

வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப்படை, பெண்கள் படை ஆகியவை மூன்றும் பிரதானமானவை. பெண்கள் படைக்குத் தலைமையேற்ற வர்தான் குயிலி. குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு ‘உடையாள் பெண்கள் படை’ எனப் பெயர் சூட்டி யிருந்தார் ராணி வேலு நாச்சியார். உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. அந்த உடையாளின் உயிர் பிரிந்த சமயம்,  வேலு நாச்சியார் மற்றும் மருது பாண்டி யர்கள் விருப்பாச்சி பாளையத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கே பாளையக் காரராக இருந்தவர் கோபால் நாயக்கர்.

ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பையும், வரி விதிப்பையும் தீவிரமாக எதிர்த்து வந்தார் கோபால் நாயக்கர். இவர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எழுத மறந்த  மிக முக்கியமான மனிதர். பிரிட்டிஷாருக்கு எதிராகத் தன்னைச் சுற்றி உள்ள பாளையக்காரர்கள் மற்றும் பல புரட்சியாளர்களைத் திரட்டி, ‘தீபகற்பக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பினை உருவாக்கினார். இதன் முக்கிய நோக்கம், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடாமல் இருப்பது, புரட்சி செய்து அவர் களை முழு மூச்சாக எதிர்ப்பது உள்ளிட்ட பல அம்சங்களை அடக்கி, அதற்காக, ஆட்களைத் தேர்வு செய்து, போர் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.

கோபால் நாயக்கரின் எண்ணத்திற்கு வலு சேர்த்தது, விருப்பாச்சி – கருமலை அடிவாரத்தில், வனத்திற்குள்ளே, அவரது கோட்டை இருந்தது. கோட்டைக்குப் பின்புறம் இருந்த மலையும், அந்த மலை உச்சியில் இருந்து விழுந்து கொண்டிருந்த தலையூற்று அருவியும், அதனைச் சுற்றி உள்ள பசுமை சூழ்ந்த அருமையான பள்ளத்தாக்குகளும், வெளியே இருந்து பார்ப்பவர்கள் கண்ணிற்கு தெரியாமல், ஒரு மாயாஜாலம் போல மறைந்திருந்தது அந்தப் பகுதி.

தன் கணவனை இழந்த வேலு நாச்சியாருக்கு, அந்தச் சோலைகளின் அழகை எல்லாம் ரசிக்கும் மனநிலை இல்லை. தன் கணவனைக் கொன்று, தன்னை நிர்கதி ஆக்கி விட்ட, பிரிட்டிஷாரிடமிருந்து, சிவகங்கையை எப்படி மீட்பது? என்பது பற்றிய சிந்தனையே எப்போதும் இருந்தது.

கோபால் நாயக்கர், அவர்களுக்கு அடைக்கலம் தந்து, வேலுநாச்சியாரின் லட்சியம் நிறைவேற, வேண்டிய உதவிகளைச் செய்து தந்தார். விருப்பாச்சியில் இருந்தபடியே, மருதுபாண்டியர் மூலமாக, சிவகங்கை மக்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, மக்களை தைரியப்படுத்தினார். அவரது புரட்சிப் படையில், சிவகங்கையைச் சேர்ந்த பல இளைஞர்கள் தன்னார்வத்துடன் சேர்ந்து, கருமலைப் பகுதியில் போர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர்.

கோபால் நாயக்கர், தனது ஆதரவு பாளையக்காரர்களாக இருந்த, எரியோடு, அம்மையநாயக்கனூர், ஆயக்குடி மற்றும் அவரது சகாக்களான, நாகம நாயக்கர், துமச்சி நாயக்கர், சோமன் துரை, சோமநாத சேர்வை உள்ளிட்ட பலருடன், அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல் கோட்டையில் தங்கி இருந்த ஹைதர் அலியின் ஆதரவும், கோபால் நாயக்கருக்கு இருந்தது.

கோட்டைக்கு கிழக்குப் பகுதியில், உள்ள மலையின் இடையே ஒரு குன்று இருக்கிறது. (இன்னும்). நான்கைந்து பேர் ஒன்றாக தங்கிக் கொள்ளும் அளவிற்கு, சற்று சமமான பாறைக் குன்றில், ஒரு தமுக்கு (டமாரம்) வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த காவலர்கள், தொலைவில் யாரேனும், எதிரிகள் அல்லது மர்ம நபர்கள் கண்ணில் பட்டால் அந்த தமுக்கை பலமாக பலமுறை அடிப்பார்கள். அந்தச் சத்தத்தைக் கேட்டு கோட்டையில் உள்ள காவல் படையினர், குதிரைகளில் உடனடியாகச் சென்று கண்காணிப்பார்கள். அதனால், இந்த மலைக்கு ‘தமுக்குக் குன்று’ என்ற பெயர் இன்றும் நிலைத் திருக்கிறது. தலையூற்று அருவி விழும் இடத்தின் அருகே உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில், வெடி மருந்து, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தனர்.

வளரி வீசுவதில் கை தேர்ந்த மருதுபாண்டியர்கள், அந்தப் பயிற்சியை வீரர்களுக்குக் கற்றுத் தருவதற்கு, மிக வசதியான இடமாக விருப்பாச்சி மலைப்பகுதி அமைந்து விட்டது. இருந்தாலும், விருப்பாச்சி பாளையத்திற்கு அடிக்கடி வருகை தந்த ஆங்கிலேய அதிகாரிகள், அந்தப் பகுதியில் தங்கள் ஆட்களைவிட்டு, கண்காணிக்கச் சொன்னார்கள். நீண்ட காலத்திற்கு, வேலு நாச்சியார் குழுமத்தினரை விருப்பாச்சி பாளையத்தில் தங்கவைக்க இயலாது என்பதை உணர்ந்த கோபால் நாயக்கர், வேலு நாச்சியாருக்கு, ஆண் போல உடைகள் அணிவிக்க வைத்து, திண்டுக்கல் கோட்டைக்கு அழைத்துச் சென்று, ஹைதர் அலியிடம் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஹைதர் அலி வேலு நாச்சியாருக்குப் பல உதவிகளைச் செய்தார் என்பது தனிக்கதை.

யார் இந்த கோபால் நாயக்கர்?

இன்றைய திண்டுக்கல் மாவட்டம்  திண்டுக்கல் – பழநிக்குச்  செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சி என்னும் ஊரில் கி.பி.1725இல் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரய்யா நாயக்கர் – காமாட்சி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் கோபால் நாயக்கர். இவர் இயற்பெயர்  திருமலை குப்பள சின்னய்யா நாயக்கர் மற்றும்  திருமலை கோபால சின்னய்யா நாயக்கர் . விசுவநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பாளையப்பட்டுகளில் ஒன்றான விருப்பாச்சியின்  19ஆவது பாளையக்காரராக இவர் ஆட்சிக்கு வந்தார்.

கோபால் நாயக்கருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும் முத்துவேல் நாயக்கர், பொன்னப்பா நாயக்கர் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

நங்காஞ்சிப் பகுதிக்கு வந்த விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயர்  அப்பகுதி மக்களின் வீரத்தைப் பாராட்டி தனது மனைவியின் பெயரான ‘விருப்பாச்சி’யை அவ்வூரின் பெயராக வைத்தார். அது முதல் நங்காஞ்சி என்ற ஊர் விருப்பாச்சி என மாறியது.

விருப்பாச்சி பாளையக்காரராக விளங்கிய கோபாலநாயக்கர் கண்காணிப்பில், புரட்சிப்படையினர் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்புப் பண்டங்களையும் பறித்தனர். மருதுபாண்டியருடனும்   (அண்டை தேசத்து) கன்னட மராட்டிய பகுதி மன்னரான துந்தாசிவாக்குடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். இது தீபகற்ப கூட்டமைப்புஎன்றழைக்கப்பட்டது, மருதுபாண்டியர்கள் தலைமையில் சிவகங்கைச்   சீமையும், அதேபோல் கோபால நாயக்கர்  தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டமைப்புடன் சேர்ந்து வலுப்பெற்றன. கன்னட தேசத்தில் தூந்தாசி வாக்கும்  கிருட்டிணப்பநாயக்கரும், மலபாரில் கேரளவர்மனும்  கூட்டுப்படை மூலம்  ஆங்கிலேயரை எதிர்த்தனர்.  கோயம்புத்தூரிலும்  சேலத்திலும்  கூட்டுப்படையினர் இயங்கினர். ஈரோட்டு மூதார்சின்னனும், கானிசாகனும் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள். மணப்பாறை லட்சுமி நாயக்கரும் , தேவதானப்பட்டி பூசாரி நாயக்கரும் தங்களது போர் வீரர்களைக் கோபால நாயக்கருக்குக் கொடுத்து உதவி வந்து உள்ளனர். பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாச்சியில் தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டமைப்பு தலைமையில் மக்கள் திரளாகப் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது.

கி.பி.1799 மார்ச்சில் கோபால நாயக்கர்  வழி காட்டுதலின் படி மணப்பாறை  லட்சுமிநாயக்கர், ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு நத்தம், மேலூர், மணப்பாறை ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.

கி.பி.1799 அக்டோபரில் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிடப்பட்ட பின் விருப்பாச்சி அரண்மனைக்கு மேஜர் ஐ. ஏ. பானர்மேன் எச்சரிக்கை செப்புப் பட்டயம் ஒன்றை அனுப்பினார். அதில் “கும்பனியருக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டால் கட்டபொம்மனைப் போல் தூக்கிலிட்டு கொல்லப்படுவர்” என்ற செய்தி இருந்தது. தற்போது இடையகோட்டை ஜமீன் அரண்மனையில் இச்செப்புப் பட்டயம் பாதுகாப்பாக உள்ளது.

ராணி வேலுநாச்சியாருக்கும், ஊமைத்துரைக்கும் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்கள், கோபால நாயக்கர் மீது ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், கி.பி.1800ல் வெள்ளையர்களை எதிர்த்து ஒரு அணி திரட்டி கோவை மீது படையெடுத்துச் சென்றார்.

கோவை தாக்குதலுக்குப் பின் கி.பி.1800 அக்டோபரில், ஆங்கிலப்படை லெப்டினட் கர்னல் இன்னஸ் பெரும் படையுடன் விருப்பாச்சியை முற்றுகையிட்டான். விருப்பாச்சி, இடையகோட்டை, வேலுர், பாளையத்தைச் சேர்ந்த மக்களும் ஏனைய பாளையத்தின் போர் வீரர்களும் சத்திரப்பட்டி பாளையத்தின் அரண்மனை முன்பு போர் புரிந்தனர். போரில் கோபால் நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் நாயக்கர் கொல்லப்பட்டார். கோபால் நாயக்கர் தப்பிவிட்டார். கர்நாடக, மராட்டிய படைத் தளபதி தூந்தாசிவாக்கை கைது செய்து பீரங்கியின் வாயில் கட்டிவைத்தனர். தொடர்ந்து கோபால் நாயக்கரின் மனைவி பாப்பம்மாள், இளைய மகன் பொன்னப்ப நாயக்கர் உட்பட 22 பேரை திண்டுக்கல்லில் கி.பி.1816 வரை சிறைவைத்தனர். கோபால்நாயக்கர் தலைக்கு அந்தக் காலத்திலேயே 20,000 ரூபாய் என அறிவித்தனர். பணத்திற்காக துரோகிகள் காட்டிக் கொடுத்தனர். கி.பி.1801 செப்டம்பர் மாதத்தில் திண்டுக்கல் ஊருக்கு வெளியே குளக்கரையில் புளிய மரத்தில் தூக்கிலிட்டனர். அந்தக் குளம் கோபால நாயக்கர் சமுத்திரம் என நகரின் மத்தியில் இன்றும் உள்ளது

கோபால நாயக்கரின் அரண்மனையையும், அவரது மனைவிக்காக்க கட்டிய அந்தப்புரத்தையும் இடித்து தரைமட்டமாக்கினர். அரண்மனையின் சுவர்களின் அடித்தளம் 45 அடி நீளமுள்ளது மட்டும் இன்றும் உள்ளது. அரண்மனை முன்பு யானை கட்டும் நடு கல், குதிரைகள் தண்ணீர் குடிக்கும் கருங்கல் தொட்டி, இன்றும் காணமுடிகிறது.

இடிந்த நிலையில் உள்ள அரண்மனை

கோபால நாயக்கர் வாழ்ந்த விருப்பாச்சி பகுதியில் தமிழக அரசின் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டு, அரண்மனை வளாக அமைவிடம் கண்டறியப்பட்டது. கள ஆய்வில் அரண்மனையின் எச்சங்கள், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரவிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், கோவிலின் சிதிலங்கள், பயன்படுத்திய மண் பாண்டங்கள், பீங்கான்கள், கண்ணாடியால் ஆன பொருட்கள் ஆய்வில் சேகரிக்கப்பட்டன. இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்ததற்கான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த ஆயுதங்களை வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்பது கள ஆய்வின் மூலம் அறியப்படுகிறது.

சதிராபாட்டி அரண்மனை

கோபால் நாயக்கர் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்படை திரட்டி கூட்டமைப்பு அமைத்துப் போரிட்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்.

மணிமண்டபம்

ஆங்கிலேயரை எதிர்த்துப் படை திரட்டிப் புரட்சி செய்த காரணத்தால்  ஆங்கிலேயரால் 1801-ம் ஆண்டு செப்டம்பரில் தூக்கில் இடப்பட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவாலயம் விருப்பாச்சி பகுதியில் அமைந்துள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...