பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த சென்னை இல்லம் நாட்டுடைமை ஆகுமா?

 பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த சென்னை இல்லம் நாட்டுடைமை ஆகுமா?

மகாகவி பாரதியார் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீட்டை நாட்டுடையாக்கியதைப் போல, சென்னை தி.நகரில் ராமன் தெருவில் பாவேந்தர் பாரதிதாசன் (29.4.1891-21.4.1964) வாழ்ந்த 10ஆம் எண் வீட்டையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, அந்த வீட்டின் பழமை மாறால் அங்கு நினைவு இல்லம் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் பிறந்த பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். பாரதி யாரின் சீடராகி பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். மூடநம்பிக் கையைப் பகுத்தறிவின் மூலம் உணர்த்திய திராவிட இயக்கக் கவிஞரான அவர், தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராக விளங்கினார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். அறிஞர் அண்ணா, பாரதிதாசனை புரட்சிக்கவி என்று 1946இல் பட்டம் சூட்டி பெருமைப்படுத்தினார்

1966ஆம் ஆண்டில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது மெரினா கடற்கரையில் பாவேந்தரின் திருவுருவச் சிலையை தமிழ் அறிஞர் பேராசிரியர் மு. வரதராசனார் திறந்து வைத்தார். 1970ஆம் ஆண்டில் ‘பிசிராந்தையார்’என்ற அவரது நாடக நூலுக்கு 1969ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

1978ஆம் ஆண்டிலிருந்து பாவேந்தரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அத்துடன் பாரதிதாசன் பெயரில் விருதையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. 1982இல் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.

1990ஆம் ஆண்டு பாவேந்தர் நூற்றாண்டையொட்டி, அவரது நூல்களை முதல்வர் கருணாநிதி நாட்டுடைமையாக்கினார். அத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன் பெயரில் அறக்கட்டளையை தமிழக அரசு நிறுவியுள்ளது. 9.10.2001இல் பாவேந்தர் பாரதிதாசன் உருவப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை ஒன்றிய அரசு வெளியிட்டது.

1971ஆம் ஆண்டில் பாவேந்தரின் பிறந்த நாள் விழாவை புதுச்சேரி அரசு கொண்டாடியபோது, புதுச்சேரியில் பெருமாள் கோவில் தெருவில் பாவேந்தர் வாழ்ந்த 95ஆம் எண் இல்லம் நாட்டுடைமையாக்கப்பட்டது. 1900-ஆம் ஆண்டில் கட்டப்பட்டதெனக் கருதப்படும் இந்த வீட்டில் பாரதி தாசன் 1945இல் குடியேறி 1964 வரை வாழ்ந்து வந்தார். அங்கு தற்போது பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படங் கள், கையெழுத்துப் படிகள், அவர் எழுதிய நூல்கள், இதழ்கள், அவர் பயன் படுத்திய பொருட்கள், பாவேந்தரைப் பற்றி அவர் காலத்தில் வாழ்ந்து பழகிய நண்பர்கள், கவிஞர்கள், உறவினர்களிட மிருந்து ஒலிநாடாவில் பதிவு செய்யப் பட்ட செய்திகள், பாவேந்தரைப் பற்றிய தமிழ் அறிஞர்களின் கருத்துகள், பத்திரிகைகளின் மதிப்புரைகள் ஆகியன அந்த அருங்காட்சியகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

இளமையிலிருந்தே நாடகத் துறையில் பாரதிதாசன் கொண்டிருந்த ஈடுபாடே, அவரை திரையுலகிற்கு இழுத்துச் சென்றது. 1947 முதல் 1953 வரை ஆறு ஆண்டுகள் திரைப்படத் துறையில் தீவிரமாக ஈடுபட்டார் பாவேந்தர். பாலாமணி அல்லது பக்காத் திருடன், கவி காளமேகம், சுலோசனா, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி, வளையாபதி, ஆகிய திரைப்படங்களுக்குப் பாவேந்தர் திரைக்கதை, உரையாடல், பாடல்கள் எழுதியுள்ளார்.

தமிழ்ப் படங்களின் தரக்குறைவான நிலை பற்றி கவலைப்பட்டவர் பாவேந்தர். எப்படியும் தரமான தமிழ்ப்படம் ஒன்றைத் தயாரிக்க விரும்பிய பாவேந்தர் அந்த நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். 14.10.1960இல் பாரதிதாசன் பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கிய பாவேந்தர், அப்போது சென்னை தி. நகர் ராமன் தெருவில் 10ஆம் எண் வீட்டில் தங்கியிருந்தார்.

தாம் எழுதிய பாண்டியன் பரிசு காப்பியத்தைத் திரைப்படமாக்க முயன் றார். பின்னர் ‘மகாகவி பாரதியார்’ என்ற தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க விரும்பி, திரைக்கதையையும் உரையாடலையும் எழுதி முடித் தார். அந்தத் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுதே 21.4.1964ஆம் ஆண்டில் தன்னுடைய 73வது வயதில் சென்னை அரசு மருத்துவமனையில் கால மானார்.

சென்னையில் அவர் வாழ்ந்த அந்த வீடு, இப்பொழுதும் பழமை மாறா மல் இருக்கிறது இந்த வீடு. இதன் அருகில் உள்ள வீடுகள் எல்லாம் அடுக்குமாடி வீடுகளாகிவிட்டன. பாரதியார் சென்னையில் வாழ்ந்த வீட்டை நாட்டுடைமை யாக்கியதைப் போல, பாவேந்தர் வாழ்ந்த இந்த வீட்டையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, அதனுடைய பழமை மாறாமல் பாவேந்தர் பெயரால் ஒரு நூலகத்தையும் ஆய்வகத்தையும் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர் அரிகர வேலன் முகநூல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இந்த வீட்டை அரசு கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், இந்த வீடு இருக்கும் இடத்தில் நாளை அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்துவிடும். அதாவது, சென்னை வந்தபோது ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி தங்கி இருந்த வீடு தற்போது இருந்த இடம் தெரியாமல் சோழா ஷெராட்டன் ஹோட்டல் ஆகிவிட்டதைப் போல.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...