சித்தர்களும் அட்டமா சித்திகளும்

சித்தர்கள் சர்வ சாதாரணமாக சில சித்து வேலைகளில் ஈடுபடுவர். அந்த நித்து வேலைகளுக்கு அஷ்டமா சித்து என்று பெயர். அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகியன அஷ்டமா சித்திகள். இந்த அஷ்டமா சித்திகள் என்னென்ன செய்யும் என்று பார்ப்போம்.

அணிமா

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது, ஆக்குவது அணிமா.

பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காகச் சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்கிற சித்தைக் குறிக்கும்.

மகிமா

சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது மகிமா சித்து.

வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியது மகிமா என்னும் சித்து.

லகிமா

கனமான பொருளை லேசான பொருளாக ஆக்குவது லகிமா சித்து.

திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாகக் கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லகிமா.

0 R

கரிமா

லேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது கரிமா சித்து.

அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது ஒரு கோவணத்தின் எடைக்குத் தன்னிடமுள்ள எல்லா பொருட்களையும் வைத்தும் தராசுத் தட்ட சரியாகாமல் கடைசியாகத் தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

பிராத்தி

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது பிராத்தி சித்து.

திருவிளையாடல் புராணத்தில் ‘எல்லாம்வல்ல சித்தரான படலம்’  என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்

வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்று தல் பிராமியம் சித்து.

 அவ்வை பிராட்டியார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்

ஐந்து தொழில்களை ஒருங்கே நடத்தும் சித்து ஈசத்துவம்.

திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பிய சித்து ஈசத்துவம் எனும் சித்து.

வசித்துவம்

ஏழு வகை தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப்படுத்துதல் வசித்துவ சித்து.

திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தி யதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்துகொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்து.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...