இயக்குநர் ஸ்ரீதர் | நினைவு தினம்

 இயக்குநர் ஸ்ரீதர் | நினைவு தினம்

ஶ்ரீதரகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த ஶ்ரீதர், தனது 20-வது வயதிலே தமிழ் உரைநடைகளை எதுகை மோனையுடன் எழுதித் தேர்ச்சி பெற்றார். பள்ளிப் பருவத்தில் அங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சி நாடகப் போட்டிகளில் தமிழ் வசனத்தை மையமாக வைத்து இவர் பல கதைகளை எழுதியுள்ளார். அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் சென்னையில் உள்ள ஏ. வி. எம் நிறுவனத்தில் இயக்குனர் ப. நீலகண்டன் அவர்களிடம் அந்த கதையை காட்டிய போது அதை படித்து பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது ஆனால் நீ இன்னும் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு இதை படமாக்கலாம் என்று கூறிவிட்டார்.

ஆனால் அந்த நேரத்தில் மனம் தளராத ஶ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் சொந்தமாக நடத்தி வந்த நாடக சபாவில் உள்ள தி. க. சண்முகத்திடம் காட்டிய போது அது விரைவில் நாடகம் ஆக நடத்தபட்டு அதைத் திரைப்படம் ஆக எடுக்க நினைத்த சண்முகம் அந்தக் கதையில் சில திருத்தங்களை செய்யச் சொன்னார். பின்பு அந்த கதை நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமாக 1954 இல் ரத்த பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீதர்.

அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த திரைப்பட வசனகர்த்தாவான இளங்கோவன் வசனத்தால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து 1963 ஆம் ஆண்டு சித்தூர் ராணி பத்மினி என்ற திரைப்படத்தில் கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார். ஶ்ரீதர் தனது தொடக்ககாலத்தில் எதிர்பாராதது, மாமன் மகள், அமரதீபம், மாதர் குல மாணிக்கம், யார் பையன், எங்கள் வீட்டு மகாலட்சுமி, உத்தம புத்திரன், மஞ்சள் மகிமை போன்ற பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.

ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினிகணேசன், சரோஜாதேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்து இரண்டு வருடம் கழித்து 1959 ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம் கதாநாயகி அந்தஸ்தை சரோஜாதேவிக்கு வழங்கியது. இத்திரைப்படத்தின் பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.

1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் “தந்துவிட்டேன் என்னை”.

சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் இயக்குனர் பணியிலிருந்து முழுவதுமாக 1991 ஆம் ஆண்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். 2008, அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 75 ஆவது அகவையில் காலமானார்.

தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் பெருமளவில் பாராட்டியுள்ளனர். ஸ்ரீதரின் ஆரம்பப்படங்கள் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் வின்செண்ட் என்னும் ஒளிப்பதிவாளர். நெஞ்சில் ஓர் ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்துராமன் மற்றும் தேவிகாவின் நடிப்பில் “சொன்னது நீதானா” என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.

புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் அன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன. சரோஜாதேவி, விஜயகுமாரி (கல்யாணப்பரிசு), ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை), ஶ்ரீகாந்த், ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி ஆகியோர் (வெண்ணிறாடை) இதில் நிர்மலா, மூா்த்தி இருவருமே இப்படத்தின் பெயரான வெண்ணிறாடை என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது ஆகியோர் ஸ்ரீதரால் அறிமுகமான நட்சத்திரங்கள்.

பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான கல்யாணப்பரிசு நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர், வைஜயந்தி மாலா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் (ராஜேந்திர கபூர், ராஜ்குமார், மீனாகுமாரி நடித்த தில் ஏக் மந்திர்), காதலிக்க நேரமில்லை (சஷிகபூர், கிஷோர் குமார் நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.

1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான கல்யாணப் பரிசு, விடி வெள்ளி போன்றவை தவிர, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.

ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான கல்யாணப்பரிசு தொடங்கி இளையராஜா வுடன் அவர் இணைந்த இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.

இயக்குனர் ஸ்ரீதர் 2008, அக்டோபர் 20-ல் சென்னையில் தனது 80-வது வயதில் காலமானார்.

அவருடைய நினைவு தினம் இன்று…

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...