வரலாற்றில் இன்று – 18.07.2020 நெல்சன் மண்டேலா

 வரலாற்றில் இன்று – 18.07.2020 நெல்சன் மண்டேலா

நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த நெல்சன் மண்டேலா 1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.

நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18ஆம் தேதியை ஐ.நா.சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது. அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

இவர் சட்டம் பயின்ற பிறகு, கறுப்பின மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து, அதன் தலைவரானார். இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப்போராட்டங்களையும் நடத்தி வந்தார்.

அதன்பின், 1961ஆம் ஆண்டு இந்த இயக்கத்தின் ஆயுதப்படைத் தலைவராக உருவெடுத்தார். இவர்மீது மனித உரிமை மீறல்கள் குற்றம் சாட்டப்பட்டு, 1962ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

‘மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்’ என அரசின் நிபந்தனையை நிராகரித்தார். நாட்டின் புதிய அரசு இவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் 1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து போராடி, இறுதியில் 1994ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். நேரு சமாதான விருது, பாரத ரத்னா விருது, அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நெல்சன் மண்டேலா 2013ஆம் ஆண்டு, 95வது வயதில் மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1861ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தெற்காசியாவின் முதல் பெண் மருத்துவரும், பிரிட்டிஷ் பேரரசின் முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவருமான காதம்பினி கங்குலி பீகார் மாநிலம் பகல்பூரில் பிறந்தார்.

1935ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி இந்து ஆன்மிகத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்தார்.

2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழக கவிஞர் வாலி மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...