திரைப்படம் போல அதிகாரியின் நடவடிக்கை…

கேரளா பெரிந்தல்மண்ணா காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வருகிறார். (அவருடைய நடை, உடை, பாவனை எல்லாம் தமிழ்நாட்டுப் பெண் போலிருக்கிறது.) அவருக்கு சானிடைசர் கொடுத்து உள்ளே அனுப்புகிறார்கள்.

உள்ளே சென்றவர் காவல் நிலையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான (PRO) ஷாஜியை சந்திக்கிறார். ஷாஜியிடம் தான் ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், கேரள அரசு பஸ்ஸில் பயணிக்கும் போது தன்னுடைய பர்சும் பர்சிலிருந்த பத்தாயிரம் ரூபாயும் தொலைந்து விட்டதாகவும் அதற்காக புகார் அளிக்க வந்திருப்பதாகவும் கூறினார்.

அதற்கு ஷாஜி புகாரை எழுதித் தருமாறு கேட்டுள்ளார். பெண் புகார் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாது என்று கூற, ஷாஜி ஏற்கெனவே அங்கு இருந்த ஒரு புகாரை காட்டி அதை மாடலாக கொண்டு எழுத சொல்லியிருக்கிறார். அதோடு பிற அதிகாரிகளுக்கு தகவலும் சொல்லியிருக்கிறார். அந்த பெண்ணும் புகாரை எழுதி கொடுத்துள்ளார்.

ஷாஜி புகாரில் போன் நம்பரையும் எழுத சொன்ன போது புகார் இருக்கட்டும், ஆனால் இதை வளர்த்துக் கொண்டு போக விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். பெண் தமிழ் நாட்டுக்காரர் என்பதால் மலையாளம் தெரியவில்லை அதனால் அவரிடம் ஷாஜி எளிமையான மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் உரையாடியிருக்கிறார்.

மேலும் ஷாஜி கேரள அரசு பேருந்து டெப்போவுக்கு போன் செய்து விபரங்களையெல்லாம் கூறியிருக்கிறார் ஆனால் அங்கிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. பணத்தைத் தவிர வேறெதுவும் போகவில்லை என்பதால் பணத்தை யாராவது திருடியிருக்க வேண்டும் இல்லையென்றால் பணப்பை நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

காவல் நிலையத்தில் பெண்ணை அமர வைத்து நல்ல விதமாகத்தான் நடத்தியிருக்கிறார்கள். பயணம் செய்யும் போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புத்திமதியும் கூறியிருக்கிறார்கள். இடையில் அந்த பெண் அனுமதி பெற்று பாத்ரூமுக்கும் போய் வந்திருக்கிறார். தொடர்ந்து புகாரை பதிவு செய்யப் போகிறோம் ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல, பெண் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

அவர்கள் மீண்டும் வற்புறுத்த பெண் சொல்லியிருக்கிறார் நான் ASP யாக முதல் முறையாக சார்ஜ் எடுக்க வந்திருக்கிறேன் என்று சொன்னதை யாரும் கண்டு கொள்ளவில்லை, யாரும் நம்பிய மாதிரியும் தெரியவில்லை பக்கத்தில் இருக்கையில் அமர்ந்து இருந்த ஷாஜியிடமும் எந்த அசைவும் இல்லை.

பெண் மீண்டும் ‘நான் ஹேமலதா IPS—ASP யாக சார்ஜ் எடுக்க வந்திருக்கிறேன்’ என்று பெயரோடு சொன்னதும், ஷாஜி உட்ப்பட எல்லோரும் அவசரமாக எழுந்து சல்யூட் அடித்திருக்கிறார்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஹேமலதா IPS-க்கு முதல் முறையாக ASP-யாக போஸ்டிங் பெரிந்தல்மண்ணா-வில் கிடைத்திருக்கிறது.

சார்ஜ் எடுப்பதற்கு முன்னால் காவல் நிலையம் எப்படி இருக்கிறது, அங்குள்ள அதிகாரிகள் எப்படி இருப்பார்கள், புகார் கொடுக்க வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள சார்ஜ் எடுப்பதற்கு முதல் நாள் காவல் நிலையம் சென்ற போது நடந்தது தான் இதெல்லாம்.

சாதாரண தமிழ் நாட்டுப் பெண்ணாக புகார் கொடுக்கச் சென்ற தனக்கு சானிடைசர் கொடுத்து உள்ளே அனுப்பியது, உள்ளே சென்ற பிறகு உட்க்கார வைத்து பேசியது, மலையாளம் தெரியாத தன்னிடம் ஷாஜி எளிமையான மலையாளமும், ஆங்கிலமும் கலந்து பேசியது, தேவை என்றாலும் பாத்ரூம் போக கேட்ட போது அனுமதித்தது. பணத்தை தொலைத்ததற்காக புத்திமதி சொன்னது. மொத்தத்தில் புகார் அளித்தவரை மரியாதையாக நடத்தியது என்று எல்லோரையும் பாராட்டியிருக்கிறார்.

கேரளா அரசும் அந்த மாநில அரசு அதிகாரிகளும் முன் மாதிரிதான் எப்பொழுதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!