மிதிவண்டி பயிற்சியாளராக ஜோதிகுமாரி! – இது போதுமா?

 மிதிவண்டி பயிற்சியாளராக ஜோதிகுமாரி! – இது போதுமா?

பீகாரை சேர்ந்த சிறுமி ஜோதி குமாரிக்கு மத்திய விளையாட்டு துறையின் பயற்சி அளிக்கபடும் உதவித்தொகை அளிக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அறிவித்துள்ளார். பீகாரை சேர்ந்தவர் மோகன் பஸ்வான். இவர் டெல்லி குருகிராமில் இ-ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. அண்மையில் விபத்தில் காயமடைந்த மோகன் பஸ்வானை பார்க்க அவரது 15 வயது மகள் ஜோதி குமாரி குருகிராம் சென்றுள்ளார். இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஜோதி குமாரி தந்தையுடனே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வருமானம் இல்லாததால் அவர்கள் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

எந்த போக்குவரத்து வசதியும் இல்லாததால், பழைய சைக்கிளை வாங்கி அதில் தந்தையை வைத்து சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார் குமாரி. அதன்படி, குமாரி சைக்கிள் ஓட்ட பின்னால் அவரது தந்தை பையை வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டார். இரவு பகலாக சைக்கிள் ஓட்டிய சிறுமி, குருகிராமில் இருந்து 1200 கிமீ தொலைவில் பீகாரில் உள்ள தனது சொந்த ஊரை அடைய 7 நாட்கள் ஆனது. சிறுமி, தனது காயமடைந்த தந்தையை வைத்துக் கொண்டு சைக்கிள் ஓட்டி வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் ஏழை மகளை வெகுவாக பாராட்டினர்.

மேலும், இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, சிறுமி ஜோதியின் தைரியத்தையும், திறமையையும் வீண் போக விடமாட்டோம் என்றும், அவருக்கு சைக்கிளிங் விளையாட்டில் உரிய பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தது. இந்நிலையில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில், ஜோதி குமாரியிடம் சோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் ஷிகிமி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். அதில், ஜோதி குமாரியின் திறனைக் கண்டறிந்தால், புதுடெல்லியில் உள்ள ஐஜிஐ ஸ்டேடியம் வளாகத்தில் உள்ள தேசிய சைக்கிள் ஓட்டுதல் அகாடமியில் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு உறுதியளிப்பதாக பதிவிட்டுள்ளார்.

இவாங்கா டிரம்ப் பாராட்டு:

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா டிரம்ப்பும் சிறுமி ஜோதி குமாரியை பாராட்டி உள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ’15 வயதான ஜோதி தனது காயமடைந்த தந்தையை பின்னால் அமர வைத்து 1200 கிமீ தொலைவில் உள்ள சொந்த கிராமத்திற்கு 7 நாட்களாக சைக்கிள் ஓட்டி வந்துள்ளார். அவரது அசாத்திய திறமையும், விடாமுயற்சியும், அன்பும் இந்திய மக்களையும், சைக்கிளிங் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது,’ என பாராட்டி உள்ளார்.

நம் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.

2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது.

நன்றாக கூர்ந்து கவனித்துப் பார்த்தால் 2000-ம் ஆண்டுக்கு பிறகுதான் அதிகமான பீகார் மக்கள் நாட்டின் தென்பகுதியை சேர்ந்த மாநிலங்களுக்கு வேலை தேடி வர ஆரம்பித்தார்கள்.

கனிம வளங்கள் அதிகமாக எதுவும் இல்லாத ஒரு மாநிலமாக அமைந்தது துரதிர்ஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது. இங்கு அதிகமாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ வேண்டிய சூழல். கங்கை ஆறு மட்டுமே இதற்கு தண்ணீர் பாசனம்.

அதிகமாக கோதுமை நெல் கரும்பு போன்றவை அதிமுக்கியமாக விளையும் பயிர்கள் ஆகும். ஆனால் கங்கை ஆறு அதிகமாக தண்ணீர் போக்குவரத்து இல்லை என்பதாலும் குறைவு என்பதாலும், பெரிதும் நம்பியிருந்த விவசாயம் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை, என்று ஒரு காலகட்டத்திற்குப் பின் இவர்கள் எல்லாம் பிழைக்க வழிதேடி தென் மாநிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்தார்கள்.

இவர்களது ஒரே பலம் அதீத உழைப்பாளிகள் படிப்பறிவு குறைவாக இருந்தாலும் அனுபவ அறிவு தங்கள் அதீதமான உடல் உழைப்பினால், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இவர்களின் அதீத உடல் உழைப்பு.

தமிழ்நாட்டில் உள்ள வேலைகளில் இவர்களது பங்களிப்பு மிக அதிகம். இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் திருப்பூரில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த, உழைப்பாள் கொரானா நேரத்தில் அவர்களின் ஊர்களுக்கு கிளம்பு போதுதான் மொத்த நபர்களையும் பேருந்து நிலையங்களில் பார்க்கும் பொழுது அதிர்ச்சி நிலவுகிறது.
அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது கடவுள் வெளிச்சம். கொரானா அனைத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. செருப்பு கூட இல்லாமல் வெறும் காலோடு கால் நடையாய் நடந்து தங்களது கிராமத்திற்கு அடைந்துள்ளது மிகப்பெரிய சாதனை படைத்த அது போல ஒரு உணர்வு வந்திருக்கிறது.

இதற்கு அங்கு உள்ள அரசுகள் வெட்கப்பட வேண்டும். அவர்களுக்கு அடிப்படை தேவையை ஏற்படுத்தி தரவில்லை ஒரு மிக முக்கியமான காரணத்தை வைத்தாலும் வாழ்வாதாரத்தை தேடி மக்கள் பல இடங்களுக்கு அலைய வைத்தது தண்ணீர் இல்லாமையும் ஒரு காரணம்.

இந்த சூழ்நிலையில் பல வட மாநிலங்களில் உள்ள மக்கள் இங்கு குறிப்பாக அதிகமான அளவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் இன்னும் உட்புறங்களில் உள்ள குக்கிராமங்களிலும் கூட இந்த வடமாநில உழைப்பாளர்கள் பார்க்க முடிகிறது.

காரணம் அந்தந்த மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அதிகாரிகள் வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி தராததுதான் மிக முக்கியமான காரணமாகத் தோன்றுகிறது. நாம் நன்றாக கூர்ந்து கவனித்துப் பார்த்தால் ஒரு ஐந்து சதவீதத்தை தவிர மற்ற அனைவரும் தங்களது கிராமங்களில் சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

இது மிகவும் அசாத்தியமான ஒன்று என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையாக அது அல்ல அவர்கள் இயற்கையாகவே படிப்பறிவு இல்லாவிட்டாலும், அதிகமான உடல் உழைப்பை கொட்டி தங்கள் உடம்பை மெருகேற்றி வைத்திருக்கிறார்கள்.

அதனால்தான் 500, 1000, 1500 கிலோ மீட்டர்கள் கூட அவர்கள் சைக்கிளில் மட்டுமல்ல நடந்து கூட சென்று சேர்ந்து இருக்கிறார்கள். இது ஏதோ சாதனை செய்துவிட்டது போல சமுதாய ஊடகங்களில் மிகப்பெரிய விளம்பரம் நடந்து கொண்டிருக்கிறது.

இது வேதனை அந்த பகுதி மக்கள் இங்கு முன்பின் தெரியாத ஒரு இடத்திற்கு சென்று வேலை செய்து திரும்ப தங்கள் நகரத்திற்கு வர முடியாமல் தவியாய் தவித்து வெறும் காலுடன் நடந்து ரத்தமும் சதையுமாக தங்கள் இல்லங்களுக்கு திரும்புபவர்கள் மிகவும் கொடுமையான ஒரு விஷயம்.

இது ஏதோ சாதனை புரிந்து விட்டார் என்பதை போல ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கின்ற அந்த பரிசுகளும் பாராட்டுக்களும் மற்ற மற்ற உழைப்பாளிகளுக்கும் கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். பசித்தவனுக்கு ஒரு வேளை மீன் கொடுப்பதைவிட தூண்டில் கொடுத்தால் அவன் தேவைப்படும்போதெல்லாம் பசிக்கும் போதெல்லாம் மீன் பிடித்துக் கொள்வான்.

ஒருசிலருக்கு செய்யும் சலுகைகள் மட்டும் போதாது என்பதுதான் இப்போது இருக்கின்ற நிலவரம். இதையெல்லாம் மத்திய மாநில அரசுகள் சரி செய்தால் மட்டுமே இந்த மண்ணில் வாழும் மனிதர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்காமல் தங்களது ஊர்களிலேயே இருந்தால் அவர்களுக்கு இன்னும் சந்தோசமான நாட்களாக அமையும் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

எது எப்படியோ 1,200 கிலோ மீட்டர் என்பது சாதாரண விஷயமல்ல பதினைந்தே நிரம்பிய ஜோதி எவ்வளவு மன தைரியமும் உடல் தைரியமும் இருந்தால் தன் தந்தையையும் சைக்கிளில் வைத்துக்கொண்டு சராசரியாக ஒரு நாட்களில் ஒரு நாளுக்கு 120 கிலோ மீட்டர் பயணித்து இருக்கிறார் என்றால் அசாத்தியமான விஷயம்தான் என்பதை மறுக்க முடியாது.

என்றாலும் கூட, அதற்கு தீர்வு அந்தப் பெண்ணிற்கு வேலை கொடுப்பது மட்டும் அல்ல, இதுபோன்ற எத்தனையோ ஜோதிகுமாரிகள் இந்த மண்ணில் இன்னும் பயணப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரு நல்ல தீர்வு வேண்டும் என்பது இந்த ஜோதிகுமாரியின் வெற்றிகரமான வேண்டுகோளும் கூட.

உண்மையிலேயே அந்த பரிசுகளை எல்லாம் ஏற்காமல் வேலைதான் வேண்டும் என்று முன் வைத்திருப்பது பாராட்டுக்குறியது என்றாலும், தன்னை போன்ற மற்ற ஜோதிகுமாரிகளையும் கவனிக்க வேண்டும் என்பதுதான் உண்மை.

காத்திருப்போம் கெட்டதை மட்டுமல்ல நல்லதையும் செய்யும் இந்த கொரானா என்று நம்புவோம்…

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...