டெல்லி ஏஐ மாநாட்டின் 4-வது நாளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மாநாட்டில் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுள் சார்பில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் ஏஐ மையம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய ஏஐ தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும். இந்தியா முழுவதும் தொழில் வாய்ப்புகள் பெருகும்.
இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள்கள் பதிக்கப்படும். இந்திய அரசு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகளை வழங்குகிறது.

இந்த முயற்சியை பாராட்டுகிறேன். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு யூ டியூப் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது லட்சக்கணக்கானோர் யூடியூப் மூலம் லாபம் பெறுகின்றனர். இன்றைய காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
கூகுளின் டீப்மைண்ட் நிறுவனம், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆல்பாபோல்ட் என்ற மாடலை உருவாக்கியது. இதன்மூலம் புரோட்டீனின் 3 டி வரைபடம் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவத் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.
அறிவியல் துறையில் மிகக் கடினமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் பேசினார். காபி குடித்த சுந்தர் பிச்சை டெல்லி பாரத் மண்டபத்தில் மத்திய வணிக துறையின் காபி ஆணையம் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சுந்தர் பிச்சை நேற்று காபி ஆணையத்தின் அரங்குக்கு சென்றார். அங்கு அவர் ரசித்து, ருசித்து காபி குடித்தார். இந்த வீடியோவை மத்திய வணிக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
