டாக்கா: வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியமைக்க 151 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் பிஎன்பி தலைமையிலான 10 கட்சிகளின் கூட்டணி சுமார் 201 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதை பிஎன்பி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார். தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளதகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் நடைமுறை மற்றும் அதன் முடிவின் நேர்மை குறித்து அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றும் ஜமாத் – இ – இஸ்லாமி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் வரை அமைதி காக்குமாறு தொண்டர்களிடம் அக்கட்சி தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 56 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதாக தகவல்.
தாரிக் ரஹ்மானுக்கு குவியும் வாழ்த்து: 20 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேச தேசிய கட்சி ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், அக்கட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்ற வங்கதேச தேசிய கட்சி, உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகமும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

வங்கதேச தேர்தல்: வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் தீவிர போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று மாலை 4.30 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் பிஎன்பி கட்சி 150+ இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
