புதுச்சேரி: புதுச்சேரி திரைப்பட விழா வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கடல்கன்னி படங்களுக்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்படும் ஒரு திரைப்படத்தின் இயக்குநருக்கு ‘நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது’ வழங்கி வருகிறது.
புதுச்சேரி ஒரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஏற்ற சிறந்த இடமாக இருப்பதால், இந்த நிகழ்வு, இந்த ஆண்டிலிருந்து சர்வதேச திரைப்பட விழாவாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி திரைப்பட விழா வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இதற்கான லோகோ வெளியிடும் நிகழ்ச்சி சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி திரைப்பட விழாவுக்கான லோகோவை வெளியிட்டார்.
அப்போது பொதுப் பணித்து றை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏ கேஎஸ்பி. ரமேஷ், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், அரசுச் செயலர் (செய்தி மற்றும் விளம்பரம்) முகமது அஹசன் அபித், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் புதுச்சேரியில் சுமார் 75 முதல் 80 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் புதுச்சேரி மிகவும் விருப்பமான இடமாக இருப்பதை இங்கு எடுக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கையில் தெரிந்துகொள்ள முடிகிறது.
மேலும், புதுச்சேரியில் உள்ள இளைஞர்கள் திரைப்படத் துறையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சிறந்த திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், அதிலிருந்து திரைப்படத் துறையின் பல்வேறு தொழில்நுட்பக் கூறுகளை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கிலும், இந்த சர்வதேச திரைப்பட விழா புதுச்சேரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு தொடங்கப்படும் புதுச்சேரி திரைப்பட விழா நாளை மறுநாள் (பிப்.12) முதல் 15-ம் தேதி வரை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி வியாழக்கிழமை மாலை கடற்கரைச் சாலையில் பிரம்மாண்டமான தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான ‘சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள்’ வழங்கப்படும். 2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைபடத்துக்கான விருது கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிதர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு வழங்கப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திரைபடத்துக்கான விருது தினேஷ் செல்வராஜ் இயக்கிய கடல்கன்னி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு வழங்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களும் சுமார் 35 பிராந்திய மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இங்கு ஒவ்வொரு நாளும் மூன்று அரங்குகளில் தலா மூன்று காட்சிகள் திரையிடப்படும்.
பிப்.13 வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்துடன் தொடங்கும் இந்த திரையிடல்களுடன் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் குருதத் மற்றும் ரித்விக் கட்டக் ஆகியோரின் புகைப்படக் கண்காட்சி நடைபெறும்.
இதுதவிர, பிப்.14-ம் அன்று பிற்பகல் இந்தியாவின் சிறந்த படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், பிப்.15 அன்று திரைப்பட இயக்குநரும் புகழ் பெற்ற நடிகருமான நாசர் நடத்தும் திரைப்பயிலரங்கம் நடைபெறும்.
புதுச்சேரி, அலையான்ஸ் பிரான்சிஸ் அரங்கில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களும் சர்வதேச திரைப்படங்கள் ஒரு நாளைக்கு இரண்டு திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளது. புதுச்சேரி, குறிஞ்சி நகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் ஒரு நாளைக்கு மூன்று திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளது.
சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களின் இயக்குநர்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற திரைப்படம் திரையிடப்படும். இந்த தொடக்க விழாவில் திரைப்பட நடிகைகள் ரேவதி, சுனைனா, திரைப்பட இயக்குநர்கள், கார்த்திக் சுப்பராஜ், பா. ரஞ்சித், தினேஷ் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மொத்த 45 திரைப்படங்கள், 8 மொழிகள், 6 திரையரங்குகள், 16 தென்னிந்திய திரைப்படங்கள், 12 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாார்வையாளர்கள் பார்வையிட உள்ளனர். இந்த திரைப்பட விழாவிவுக்கான அனுமதி முற்றிலும் இலவசம். திரைப்படங்களைக் காண விரும்புபவர்கள் https://pyff.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முன்பதிவு செய்பவர்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். தற்போது, புதுச்சேரி மற்றும் தமிழக மக்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த திரைப்பட விழா, எதிர்காலத்தில் இந்தியாவையும் உலகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய சர்வதேச திரைப்பட விழாவாக வளர்ச்சி அடையும் என்று அதிகாரிகள் தரப்பில் குறிப்பிட்டனர்.
