சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் ஏப்.6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, ‘பொதுத் தேர்வு எழுத உள்ள 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப். 9 முதல் 14-ம் தேதி வரை நடத்தப்படும். மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 5 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர்’ என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற செய்முறைத் தேர்வை அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார்.
செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் பிப்.23-க்குள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
