இன்றைய முக்கிய நிகழ்வுகள் (நவம்பர் 27)

இன்று நன்றி தெரிவிக்கும் தினம் (Thanksgiving Day)! ‘தேங்க்ஸ் கிவ்விங் டே!’ என்பது அமெரிக்காவில் கொண்டாடப்படும் ஒரு பிரதானமான பண்டிகையாகும். இந்தப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் 4வது வார வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (நவம்பர் 27, 2025) அமெரிக்க மக்கள் இந்தப் பாரம்பரிய விழாவைக் கொண்டாடுகின்றனர். அதாவது அமெரிக்காவில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் குளிர் நிலவும். ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு வந்த யாத்திரீகர்கள் (Pilgrims), இந்தக் கடுங்குளிரில் சிக்கி பலவித நோய்களுக்கு ஆளாயினர். அவர்கள் ஆண்டவனிடம் வேண்டியதால், ஆண்டவர் அவர்களைக் கடுங்குளிரிலிருந்து காப்பாற்றினார் என்பது ஒரு நம்பிக்கை. படிப்படியாகக் குளிர் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியபோது, கடுங்குளிரிலிருந்து தங்களைக் காத்த ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக, குளிர் ஆரம்பிக்கும் நவம்பர் மாதத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. (இது அறுவடை திருநாளாகவும் பூர்வகுடிகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.) இந்த நாளில் வான்கோழியைப் (Turkey) பயன்படுத்தி பல வகையான உணவு வகைகளைத் தயாரித்து, குடும்பத்துடன் அமர்ந்து விருந்துண்டு மகிழ்வர். இதுவே இப்பண்டிகையின் மிக முக்கியமான அம்சமாகும். இன்று அமெரிக்க மக்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் வாழ்வில் தாங்கள் பெற்ற அனைத்து நன்மைகளுக்கும் மனதார நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

மாவீரர் நாளின்று ஆம்.. நவம்பர் 27 ஆம் தேதி என்பது ஈழத் தமிழர்கள் மத்தியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். இது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் மாவீரர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போர்களில் உயிர்நீத்த போராளிகளான மாவீரர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழீழப் போராட்டத்தின் முதல் களச் சாவாகக் கருதப்படும், லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்) என்பவர் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி களத்தில் வீர மரணமடைந்தார். அவரது நினைவு நாளைத் தொடக்கமாகக் கொண்டு, இந்த நாள் பின்னர் ஒட்டுமொத்த மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நாளில், உயிர்நீத்த போராளிகளின் தியாகங்களைப் போற்றும் விதமாக, அவர்களுக்கான நினைவிடங்கள் மற்றும் கல்லறைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை 6:05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றும் நிகழ்வுகள் நடைபெறும். இலங்கை, இந்தியா மட்டுமின்றி, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அதிகமுள்ள கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் பல நாடுகளிலும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த அனைத்து மாவீரர்களின் தியாகமும் இந்த நாளில் நினைவுகூரப்படுகிறது.

முதல் பெண் கணினி புரோகிராமர் – அடா லவ்லேஸ் நினைவு நாள் ண்டனில், டிசம்பர் 10, 1815 ஆம் ஆண்டு பிறந்தவர் அடா லவ்லேஸ். கவிஞர் லார்ட் பைரனின் மகளான இவர், தனது நேரத்தை முக்கியமாக கணிதத்திலும், இசையிலும் செலவிட்டார். கண்டுபிடிப்புகளும் பங்களிப்புகளும்: பறக்கும் இயந்திரம் (1828): தனது 13வது வயதிலேயே பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சார்லஸ் பாப்பேஜ்ஜுடன் சந்திப்பு (1833): அடா தனது 17 வயதில், கணினி உலகின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் பாப்பேஜ்ஜியைச் சந்தித்தார். அடாவின் கணித அறிவு மற்றும் ஆய்வுத் திறன் பாப்பேஜ்ஜை வெகுவாகக் கவர்ந்தது. இவர்களது நட்பு தொடர்ந்து நீடித்தது. 1834 ஆம் ஆண்டில், பாப்பேஜ் தனது ‘வேறுபாட்டுப் பொறி’ (Difference Engine) என்ற கணக்கிட்டு இயந்திரத்தின் அடுத்த கட்டமாக, ‘பகுப்பாய்வு இயந்திரத்தை’ (Analytical Engine) உருவாக்கத் தொடங்கினார். 1842 ஆம் ஆண்டில், இத்தாலிய கணிதவியலாளர் லூயிஸ் மினிப்ரே, பாப்பேஜ்ஜின் பகுப்பாய்வு இயந்திரத்தின் ஆய்வுகளை வெளியிட்டார். இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து, பாப்பேஜ்ஜுடன் இணைந்து அடா லவ்லேஸ், பகுப்பாய்வு இயந்திரத்திற்கான முதல் கணினி நிரலை (Computer Program/Algorithm) எழுதினார். இதுவே உலக வரலாற்றில் எழுதப்பட்ட முதல் கணினி நிரலாகக் கருதப்படுகிறது. இது அடாவிற்கு நீடித்த புகழைத் தேடிக் கொடுத்தது. மொத்தத்தில் அடா தன்னை ஒரு ஆய்வாளர் (Analyst) மற்றும் மீவியற்பியன் (Metaphysician) என்று முன்நிலைப்படுத்திக் கொண்டார். அவர் பாப்பேஜ்ஜின் இயந்திரத் திட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கான அல்கோரிதம்களை எழுதினார். மிக முக்கியமாக, இந்த இயந்திரம் வெறும் எண்களைக் கணக்கிட மட்டுமல்லாமல், பொது நோக்கத்திற்காகப் (General Purpose) பயன்படுத்தப்படும் ஒரு கணினி என்றும், மிகச் சிக்கலான செயல்பாடுகளைத் (Complex Problem) தீர்க்க உதவும் என்றும் அந்தக் காலத்திலேயே தொலைநோக்குப் பார்வையுடன் கூறினார். (இன்றைய நவீன கணினிச் செயல்பாட்டின் அடிப்படைத் தத்துவத்தை அன்றே அவர் உணர்ந்தார்.) அடாவின் கணிதத் திறமை மற்றும் கணினி நிரலாக்கத்திற்கான பங்களிப்பைப் போற்றும் வகையில், அமெரிக்க இராணுவம் வடிவமைத்த ஒரு சக்திவாய்ந்த நிரலாக்க மொழிக்கு “அடா நிரலாக்க மொழி” (Ada Programming Language) எனப் பெயரிடப்பட்டது. முதல் பெண் புரோகிராமரான அடா லவ்லேஸ், இதே நவம்பர் 27, 1852 அன்று தனது 36வது வயதிலேயே காலமானார். ஆனால் அவரது பங்களிப்பு இன்றும் கணினி அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு நீடித்த ஊக்கசக்தியாக உள்ளது.

வி.பி. சிங் நினைவு நாள் – (நவம்பர் 27) இந்திய அரசியலின் அதிசயம், சமூக நீதிக்கான போராளி, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த தலைவர் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் நினைவு நாளான இன்று (நவம்பர் 27, 2025), அவரை நினைவுகூர்வது நமது கடமையாகும். எத்தனையோ வட இந்தியத் தலைவர்களைத் தமிழக மக்கள் நேசித்தாலும், வி.பி. சிங் ஒருவர்தான் தமிழர்களின் இதயத்தோடு மட்டுமல்லாமல், அவர்களின் உணர்வுகளோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர்! சாம்பிள் சொல்வதானால் பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்குக் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய நிலையே நீடித்தது. ஆனால், தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும்போதே, “காவிரி நடுவர் மன்றம்” அமைக்க உத்தரவிட்டார். அதன் மூலம் தமிழக விவசாயிகளின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றார். ஈழத்தை அமளிக் காடாக மாற்றி தமிழர்களைக் கொன்று குவிக்கப் பயன்படுத்தப்பட்ட இந்திய ராணுவத்தை உடனடியாக திரும்பப் பெற்றார். 1989 நவம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய முன்னணி ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும், முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கி, தமிழகத்திற்கு உரிய அங்கீகாரத்தையும் பிரதிநிதித்துவத்தையும் அளித்தார். சென்னை விமான நிலையத்தின் பெயர்களாகத் தமிழ்ப் பெருந்தலைவர்களான காமராஜர் மற்றும் அண்ணா பெயர்களைச் சூட்டி அழகு பார்த்தார். இதை எல்லாம் தாண்டி வி.பி. சிங் என்றால் இந்திய வரலாற்றில் நீக்கமற நிறைந்திருப்பது மண்டல் பரிந்துரையை அமல்படுத்தியதே ஆகும். தமிழகத்தின் சமூக நீதித் தத்துவத்தை அவர் சரியாகப் புரிந்து கொண்டு, பின்தங்கிய வகுப்பினருக்கான மண்டல் பரிந்துரையினை அமல்படுத்தி, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை வழங்கினார். மண்டலை அமல்படுத்தியதால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட போதும், அவர் ஆற்றிய அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமான உரை, இன்று படித்தாலும் அவரது ஆழ்ந்த சமூக நீதிக்கான புரிதலைத் தெரிந்து கொள்ளலாம். மண்டலுக்கு எதிரான மத ரீதியான பதட்டத்தைத் தணிக்கும் விதமாக, அத்வானியின் ர(த்)த யாத்திரையைத் தடுத்து நிறுத்தி சமூக நல்லிணக்கத்தைக் காத்தார். “சமூக அதிகாரம் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே என் அரசியலின் நோக்கம். அந்த சமூகத் தலைவர்கள் அதிகாரம் பெற்று அதைச் சிறப்பாகப் பயன்படுத்தும் போது என் வரலாற்றுப் பங்களிப்பு முழுமை பெறுகிறது. எனவே பதவி முக்கியமில்லை” என்று பதவி விலகியபோதும் அறிவித்தார். முன்னதாக ராஜீவ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தபோது அம்பானி, அமிதாப் பச்சன், வாடியா போன்ற யாரையும் விட்டு வைக்காமல் கருப்புப் பணம், ஊழல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தார். பாதுகாப்பு மந்திரியானபோது போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்து உண்மையை நிலைநாட்டினார். எந்தப் பதவியாக இருந்தாலும், தான் கொண்டுள்ள லட்சியத்தை அடையப் பயன்படுத்துவார். இல்லை எனில் உடனே விலகி விடுவார். தேவகவுடா பிரதமர் பதவி விலகியவுடன் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு வந்தபோதும் பிடிவாதமாக மறுத்தார். அவரது 11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்காமல் உண்மையான ஜனநாயகம் மலரச் செய்தார். பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர்: புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுதும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். அவரது நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டார். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதன் மூலம் அந்த விருதுக்கு உண்மையான அர்த்தம் கிடைத்தது. ஆயிரக்கணக்கான டெல்லி குடிசைவாசிகள் அவர்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்துச் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பே அவர் மரணத்திற்குக் காரணமாகி விட்டது. மக்கள் மீதான அவரது அளவற்ற அக்கறைக்கு இதுவே சான்று. கவித்துவமான கலைஞர்: அவரது ஓவியங்கள் கவித்துவமானது. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது. “ஒரு துளி வானம் ஒரு துளி கடல்” என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு. வானமும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான். மொத்தத்தில் வி.பி. சிங் – அரசியலின் அதிசயம். தமிழர்கள் மேலும் திராவிட இயக்கத் தலைவர்கள் மேலும் தனி அன்பைச் செலுத்திய அந்த மாமனிதரை இந்த நினைவு நாளில் ஆழ்ந்த மரியாதையுடன் நினைவில் கொள்வோம்.

1895 – நோபல் பரிசுக்கான நோபல் அறக்கட்டளையை உருவாக்க தன் சொத்தில் 94 சதவீதத்தை (அன்றைய மதிப்பில் 3,12,25,000 ஸ்வீடன் க்ரோனார்கள்) வழங்கும் உயிலில் ஆல்ஃப்ரெட் நோபல் பாரீசில் கையெழுத்திட்ட நாள் 1833 ஆகஸ்ட் 21 அன்று ஸ்வீடனில் ஒரு பொறியாளர்கள் குடும்பத்தில் பிறந்த நோபல், ஒரு பொறியாளர், வேதியிலாளர், கண்டுபிடிப்பாளர் மட்டுமின்றி பெரிய போர்த்தளவாட உற்பத்தியாளரும் ஆவார். போஃபர்ஸ் உட்பட 90 போர்த்தளவாட நிறுவனங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அவர் 355 கண்டுபிடிப்புக்களுக்குக் காப்புரிமை பெற்றிருந்தாலும், அவரை உலகறியச் செய்தது டைனமைட்தான். இங்கிலாந்து உருவாக்கிய கார்டைட் உள்ளிட்ட, புகையில்லாமல் வெடிக்கக்கூடிய பொருட்களுக்கு, அடிப்படையாக அமைந்தது இவர் கண்டுபிடித்த பாலிஸ்டைட் என்னும் பொருள்தான். சுரங்கம் தோண்டுதல், மலைகளை, கற்களை உடைத்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு டைனமைட் பயன்பட்டாலும், அழிவுப் பொருளை உருவாக்கியவராகவே நோபல் பார்க்கப்பட்டார். அவரது மறைவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பாக, அவரது சகோதரர் லுத்விக் மறைந்தபோது, ஒரு ஃப்ரான்ஸ் செய்தித்தாள், நோபல் இறந்துவிட்டதாகக் கருதி, ‘மரண வியாபாரி மரணமடைந்தார்’ என்று செய்தி வெளியிட்டிருந்தது. அதனைப் படித்த நோபல், தன்னை உலகம் அவ்வாறு நினைவுகூருவதை விரும்பாததால், நோபல் பரிசை உருவாக்கினார். உயில் எழுதப்பட்டு ஓராண்டில், 1896 டிசம்பர் 10 அன்று நோபல் மறைந்துவிட, 1900 ஜூன் 29 அன்று ஒரு தனியார் நிறுவனமாக நோபல் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், உடற்கூறியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மனித குலத்திற்குப் பெரும் பயனளிக்கும் சாதனைகளைப் புரிவோருக்கு இப்பரிசு வழங்கப்படவேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி, 1901இலிருந்து வழங்கப்பட்டுவருகிறது. ஒரு நோபல் பரிசின் இன்றைய மதிப்பு சுமார் ஏழேகால் கோடி ரூபாய்களாம். 1966இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செயற்கைத் தனிமம், நோபலின் பெயரால் நோபலியம் என்று பெயரிடப்பட்டது.

பே டெல் முண்டோ பிறந்த நாள் (Fe Villanueva del Mundo, OLD ONS OGH, நவம்பர் 27, 1909 – ஆகஸ்டு 6, 2011) பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தை மருத்துவராவார். இவர் ஹார்வார்டு மருத்துவ பல்கலைகழகத்தில் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவியாவார். இவரே முதன் முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் குழந்தை மருத்துவத்திற்கான முதல் மருத்துவமனையை நிறுவியவர். பிலிப்பைன்ஸ் குழந்தை மருத்துவத்துறையில் எண்பதாண்டுகளைக் கடந்த முன்னோடியான இவரது சேவை போற்றப்படுகிறது. 1977 இல் இவர் ரமோன் மக்சேசே விருது மற்றும் அங்கீகாரத்திற்கான பன்னாட்டு விருது ஆகியவற்றினைப் பெற்றவர். 1980 இல் இவர் பிலிப்பைன்சின் தேசிய அறிவியலாளராக உயர்வு பெற்றார். 2010 இல் இவர் ஆர்டர் ஆஃப் லகந்துலா என்ற சிறப்பினைப் பெற்றார். டெல் முண்டோ சாண்டோ டோமாஸ் பல்கலைக்கழகம் மற்றும் தூர கிழக்கு பல்கலைக்கழகம் போன்ற பல வசதிகளில் பணியாற்றினார், அங்கு அவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக குழந்தை மருத்துவத் துறையின் தலைவராக இருந்தார். இந்த நேரத்தில், அவர் குழந்தை மருத்துவத்தில் தொடர்ந்து உதவ ஒரு தனியார் பயிற்சியை நிறுவினார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கான கற்பித்தல் நிறுவனமான தாய்வழி குழந்தைகள் மற்றும் சுகாதார நிறுவனத்தையும் அவர் நிறுவினார். டெல் முண்டோவின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று, 1957 இல் அவர் குழந்தைகள் மருத்துவ மையத்தை நிறுவியது, அங்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவமனையை இயக்குவதற்கான அதிகாரத்துவக் கட்டுப்பாடுகளை உடைக்கும் முயற்சியில், அவர் மருத்துவ மையத்திற்கு நிதியளிக்க தனது வீட்டையும் தனது சொந்த உடைமைகளையும் விற்றார். மற்றும் பிலிப்பைன்ஸின் கிராமப்புறங்களில் வசிக்கும் குடிமக்களுக்கு மருத்துவ உதவிகளை கொண்டு வந்தார். அவரது நடவடிக்கைகள் சுகாதாரப் பாதுகாப்பை இதுவரை அணுக முடியாதவர்களுக்குக் கொண்டு வந்தன, மேலும் நாட்டில் பல கீழ்மட்ட குடிமக்களுக்கு சிகிச்சை அளித்தன. பல தாய்மார்களுக்கு குழந்தை பராமரிப்பு குறித்து கல்வி கற்பித்தார், தொற்று நோய்களைப் படித்தார், ஆராய்ச்சி செய்தார் மற்றும் பல மருத்துவ இதழ்களில் எழுதினார். 1980 ஆம் ஆண்டில் “பிலிப்பைன்ஸின் தேசிய விஞ்ஞானிகளில்” ஒருவராகப் பெயரிடப்பட்ட முதல் பெண்மணியிவர்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப் பாலம் பர்த் டே டுடே சுலோச்சனா முதலியார் பற்றி கொஞ்சம் டீடெய்ல் ரிப்போர்ட் இது : 1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து ‘சுட்டது’:- திருநெல்வேலி-பாளையங்கோட்டை இரட்டை நகரங்கள். இரண்டிற்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணி ஆறு. ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும்.ஆற்றைக் கடந்திடப் படகில்தான் பயணித்திடல் வேண்டும். படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும். குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது. படகில் இடம் பிடித்திட, முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரங்கள். சமூகவிரோதிகளின் திருவிளையாடல்களுக்குப் பஞ்சமிருக்காது. களவும்,கலகமும், குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை. 1840-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு: E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆன நிலை. தாமிரபரணிப் படகுத் துறையில் குழப்பம்; கலகம்; நாலைந்து கொலைகள்; எனவே, கலெக்டர் தூங்காமல் தவித்துக்கொண்டிருந்தார். நெல்லை-பாளை நகரங்களுக்கிடையே பாலம் ஒன்றிருந்தால்……சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார். ஆலோசனைக் கூட்டமும், அரை லட்ச மதிப்பீட்டில் பாலம் கட்டத் தீர்மானமும்:- இதை ஒட்டி கேப்டன் பேபர், W.H. ஹார்ஸ்லி, நமது சுலோசன முதலியார் (தாசில்தார் பதவிக்குச் சமமான சிராஸ்தார் பதவி வகித்ததால் அழைக்கப் பட்டவர்),கலெக்டர் தாம்சன் தலைமையில் கூடினர். உடனடியாகப் பாலங்கட்டத் தீர்மானிக்கப்பட்டது.கேப்டன் பேபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வரைபடம் தயாரானது. 760 அடி நீளம்,21.5 அடி அகலம், 60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுக்கள், அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள்-என அமர்க்களமான வரைபடம் தயாரானது. தூண்கள் ரோமானிய அரண்மனயை நினைவூட்டின.லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் திகழ்ந்தது. திட்ட மதிப்பீடு அரை லட்சம். கலெக்டர் உட்பட அனைவரும் மலைத்துப் போயினர். இன்றைய மதிப்பில் அது பல கோடியைத் தாண்டிவிடும். ஆனால் மகிழ்ச்சியுடன் கலெக்டர் ஒப்புதல் அளிக்கின்றார். பணத்திற்கு என்னசெய்வது? எங்கே போவது ? மக்களிடம் வசூல் செய்வது என்று தீர்மானிக்கின்றார், அதே சமயம் கலெக்டர். அவரிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோசன முதலியார் பக்கம் கலெக்டரின் பார்வை செல்கின்றது. அது சரி யார் இந்த சுலோசன முதலியார்? திருமணம், தொண்டை மண்டலத்தில் உள்ள ஓர் சிற்றூர். இங்கிருந்து நெல்லைக்குக் குடியேறியவர்கள்தான், முதலியாரின் மூதாதையர்கள். கோடீ்ஸ்வரக் குடும்பம். வீட்டில் தங்கக் கட்டிகள் பாளம் பாளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமாம். தங்கம், வெள்ளி நாணயங்க்கள் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருப்பார்களாம். கௌரவத்திற்காகவே க்லெக்டர் ஆபீஸ் உத்தியோகம். குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்குச் சமமாக அலுவலகத்திற்கு வருபவர். நீளமான ‘அல்பேகா’ கருப்புக் கோட்டு், ஜரிகைத் தலைப்பா, அங்கவஸ்திரம், வைரக் கடுக்கன் ஆகியவ்ற்றோடு அலுவலகத்திற்கு வருவதே கம்பீரமாக இருக்கும். மக்களிடம் வசூல் வேட்டை அவருக்குத் தர்ம சங்கடமான நிலை. நடந்தனவற்றை வீட்டில் மனைவியிடம் சொல்கின்றார். மனைவி வடிவாம்பாள், “கவலைப்படாதீர்கள்; தூங்குங்கள்; காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என, ஆறுதல் அளிக்கின்றார். சுலோசன மு்தலியாரின் நினைவலைகளின் சுழற்சி:- அப்பாவைப் பற்றிய எண்ணங்களில் மூழ்குகிறார். வீர பாண்டிய கட்ட பொம்மன் புகழ் மேஜர் பானர்மெனிடம் மொழி பெயர்ப்பாளராகத் தனது தந்தை வேலை பார்த்தது நினைவுக்கு வருகின்றது.1799-ஆம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்படுவதற்குவதற்குமுன், கயத்தாறு மாளிகை விசாரணயில் முதல் சாட்சியே, இவர் தந்தை, இராமலிங்க முதலியார்தான். பின்னர், கர்னல் மெக்காலே தனது ஏஜெண்டாக்கித் திருவனந்தபுரத்திற்கு் அப்பாவை அழைத்துக் கொண்டது . மனைவி வடிவாம்பாள் குடும்ப வசதி. ஒரே மகன், வேதாத்திரிதாச முதலியார் திருவாங்கூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது. என்றெல்லாம் நெஞ்சத்திரையில் நிழலாட பல்வேறு நினைவுகளுடன் இரவுப்பொழுதைக் கழிக்கின்றார். ஒரு முடிவெடுத்தும் விடுகின்றார். அவரது தந்தை “மொழிப்பாலமாக” (மொழி பெயர்ப்பாளர்) இருந்து சம்பாத்தியம் செய்ததை, ‘ஆற்றுப் பாலத்தில்” போட முடிவு செய்கின்றார். கணவனே கண்கண்ட தெய்வமென வாழும் வடிவாம்பாள் மறுக்கவா போகி்ன்றார்? கலெக்டர் தாம்சன், சுலோசன முதலியாரைக் கட்டி்யணைத்த கதை:- மறுநாள் காலையில், கலெக்டரிடம், பாலங்கட்ட ஆகும் மொத்தச் செலவையும் தாமே ஏறுக் கொள்வதாக வாக்குக் கொடுக்கின்றார். சொன்னதுடன் வெள்ளித் தாம்பாளத்தில் தன் மனைவி தந்த தங்க நகைகளையும்,கொஞ்சம் பணத்தையும் “அச்சாரக் காணிக்கை” என்று சொல்லிக் கலெக்டரிடம் கொடுக்கின்றார். கலெக்டருக்கோ இன்ப அதிர்ச்சி. திக்குமுக்காடிப் போகின்றார். வெள்ளையன்-கருப்பன் பேதங்கள் காணமல் போகின்றன. மரபுகள் உடைகின்றன. கலெக்டர், முதலியாரை, அப்படியே ஆவி சேர்த்து “ஆலிங்கனம்” செய்து பேச வார்த்தையின்றித் தவிக்கின்றார். பாலத்திருப்பணிக்குக் தனிமனிதர் தந்த நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்கச் செய்தது வரலாற்று உண்மை. கலெக்டர் புது உத்வேகத்துடன் செயல்படுகின்றார். பாலமும் கட்டி முடிக்கப் படுகின்றது. அப்பேர்பட்ட பாலத்துக்குத்தான் இன்னிக்கு பரத் டே ஆமாமுங்க.. நம்ம நெல்லை–பாளை.,இரு நகரங்களை இணைக்கும் சுலேச்சனா முதலியார் பாலத்திற்கு இன்று (27ம் தேதி) 183வது வயது கொண்டாடப்படுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!