சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு தேசிய விருது

தமிழ்நாடு அரசின் அரசின் முன்னெடுப்புகள் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி அரியானாவின் குருகிராம் பகுதியில் நடந்தது.

இதில் நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற பிரிவில் உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றிருக்கிறது. இதற்கான விருதை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார். அப்போது மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பிரபு சங்கரும் உடன் இருந்தார்.

சென்னையின் பொது போக்குவரத்து அமைப்பில் செயல்திறன், அணுகல், உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இதேபோல், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல் திறனுக்கான விருதையும், நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டு சான்றிதழையும் பெற்றிருக்கிறது. இதற்கான விருது, பாராட்டு சான்றிதழையும் அமைச்சர் சிவசங்கர் பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “நமது திராவிட மாடல் அரசின் அரசின் முன்னெடுப்புகளான ‘விடியல் பயணம்’, சென்னை மாநகர பள்ளிகளுக்கான பிரத்யேக பேருந்து வசதி, ‘சென்னை ஒன்’ செயலி மற்றும் ஒருங்கிணைந்த டிக்கெட் போன்ற திட்டங்கள், இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!