காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரா நோக்கி சென்றால், தமிழகத்துக்கு மழை உள்ளிட்ட எந்த தாக்கமும் ஏற்படாது.
வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதற்கான அமைப்பு அப்படியே மாறியது. இதனால் எதிர்பார்த்த மழையும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தகட்டமாக எப்படி நகரும்? வலுவடைந்தால் அதன் இலக்கு எங்கே நோக்கி இருக்கும்? என்பது பற்றிய மற்ற விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் இந்த அமைப்பு ஆந்திரா நோக்கி சென்றால், தமிழகத்துக்கு மழை உள்ளிட்ட எந்த தாக்கமும் ஏற்படாது.

அதுவே சென்னைக்கு அருகே கடந்து, ஆந்திரா சென்றால், வட தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என சொல்லப்படுகிறது.
