சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த தீபாவளி ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள்..!

அக்டோபர் 17-ந்தேதி தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட ஏராளமானோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களில் பலர் ரெயில்களில் பயணம் செய்வார்கள். தற்போது ரெயில் டிக்கெட்டுகள் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யப்படுகிறது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் வெள்ளிக்கிழமையே அதாவது அக்டோபர் 17-ம் தேதியே ஊருக்கு கிளம்புவார்கள். எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம்.

அதன்படி, அக்டோபர் 17-ந்தேதி சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்றும், அக்டோபர் 18-ந்தேதி (சனிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளையும் (செவ்வாய்க்கிழமை), அக்டோபர் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்பவர்கள் வருகிற 20-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம். மேலும், அக்டோபர் 20-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி அன்று பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 21-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம்.

முன்னதாக அக்டோபர் 16-ந்தேதி (வியாழன்) அன்று சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊரில் இருந்து அக்டோபர் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை திரும்புபவர்கள் வருகிற 22-ந்தேதியும், அக்டோபர் 22-ந்தேதி (புதன்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 23-ந்தேதி முன்பதிவு செய்யலாம்.

இந்த நிலையில் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கி, சில நிமிடங்களிலேயே நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, சேரன், பொதிகை எஸ்க்பிரஸ் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்ததால், இணையதளத்திற்குள் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிலர் சிரமத்தை சந்தித்தனர்.

இருப்பினும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட்டுகளை திட்டமிட்டபடி முன்பதிவு செய்தனர். முன்பதிவு முடிந்த பிறகு பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றன. டிக்கெட் கிடைத்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், டிக்கெட் கிடைக்காதவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முன்பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடயில் தீபாவளி ரெயில்களுக்கான முன்பதிவுகளை பொறுத்து சிறப்பு ரெயில்கள் இயக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும், தீபாவளிக்கு 5 நாட்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 15-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தொிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!