ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி..!

அரியலூரில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ராஜேந்திர சோழனின் 1000ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் தி.மு.க. அரசின் கூட்டணி எந்தவித மாற்றமும் இன்றி நிலைத்து வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதிபட தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழலில், தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாவட்டங்கள்தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று, தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியும் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்து சில நிகழ்வுகளில் பங்கெடுக்க உள்ளார். இதன்படி கங்கை கொண்ட சோழபுரத்தில் வருகிற 27-ந் தேதி ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, ஆடித் திருவாதிரை விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. கண்காட்சி நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இதுகுறித்து பா.ஜனதா வட்டாரங்கள் கூறுகையில், ‘கேரளாவில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் அரசு விழாவில் அவர் பங்கேற்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் 27-ந் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவான, ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த விழாவானது, ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகியவற்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற இருக்கிறது. விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

மேலும், இந்த விழாவில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும், பல்வேறு தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். பிரதமர் மோடி வருகையையொட்டி, அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தன.

இந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரியலூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுவிட்டு, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. மறுநாள் (28-ந் தேதி) தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!