நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 20 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர். நாகையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ளப்பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 20 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரும்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கடற்கொள்ளையர்கள் கொடூரமாக தாக்கியதாக காயமடைந்த மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலானது மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!