மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021 பிப்ரவரியில், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, நேற்று முன்தினம், 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 2,376 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மியான்மரில் ஆளும் ராணுவம் தெரிவித்துஉள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நய்பிடா விமான நிலையத்தில் தகவல் தொடர்பு கோபுரம் இடிந்து விழுந்ததால், விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், யாங்கூன் நகருக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டட இடிபாடுகளால், மியான்மர் முழுதும் கான்கிரீட் குவியலாக காட்சியளிக்கிறது.