ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது.
8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் லீக் சுற்றை தாண்டவில்லை.
இந்த நிலையில் ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி, ஒரே ஒரு லீக் ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்ட நியூசிலாந்தை (இந்தியாவுக்கு எதிராக), வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
அதேவேளையில், லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக நியூசிலாந்து கடுமையாக போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.19½ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.9¾ கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.