முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்காக தங்கள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றன.
அந்தவகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாக கூட்டரங்கில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்க தென் மாநில கட்சிகளின் தலைவர்களை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எந்தெந்த பிரச்சினைகளை முன்னெடுத்து பேசவேண்டும் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளார். இந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் அரசின் கவனத்தை ஈர்த்து பேச இருக்கிறார்கள்.