இன்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்..!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர்.

இதனால் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்பதால் அதிபராக பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றத்தை கலைத்து திசாநாயக்க உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இத்தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. 21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து அதிபரின் தேசிய மக்கள் சக்தி களமிறங்குகிறது. ராஜபக்சேக்களின் இலங்கை பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. சுமார் 9 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்னதாக, திங்கள்கிழமை நள்ளிரவு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் 1 கோடியே 17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 10 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள்.

தேர்தல் நடைமுறை: இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225 ஆகும். இவர்களில் 196 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகள் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் எஞ்சிய 29 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். விருப்ப வாக்கு அடிப்படையில் இத்தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஒரு வாக்காளர் தாம் விரும்பும் கட்சியிலிருந்து போட்டியிடும் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம்.

வாக்கு எண்ணிக்கை: வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மேற்பார்வையில் அரசு ஊழியர்களால் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் நாளை முறைப்படி வெளியிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!