“நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! தனுஜா ஜெயராமன்

 “நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! தனுஜா ஜெயராமன்

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்தியவர் டிவிஎன்.

திருநெல்வேலி, பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தென்னகத்து மண்!

பேரறிஞர் அண்ணா அவர்களாலும், மக்களாலும் டி.வி.என் என அன்புடன் அழைக்கப்பட்ட
நடிக மணி டிவி.நாராயணசாமி, திருநெல்வேலி
எட்டையாபுரம் அருகில் உள்ள, சி.துரைச்சாமி புரம் சிற்றூரில் 1921ல் பிறந்தார்.

அவரது கிராம மக்கள் நடத்திய, லவன்- குசன் நாடகத்தில், பத்து வயது பாலகனாக இருக்கும்போதே, *லவன்* ஆக நடித்து, கிராம மக்களின் பாராட்டைப் பெற்றவர்!

பதினோரு வயதிலேயே பிரகலாதன் வேடத்தில் நடித்து, *பால கதாநாயகனாக* உருவானவர்,

1936ம் ஆண்டு, டி.கே.எஸ் சகோதரர்களின் மதுரை பால சண்முகானந்த சபா வில் சேர்ந்து, புராண, சரித்திர, சமூக, நாடகங்களில் நடித்து,
பெரும்புகழ் பெற்றார்!

ராமாயணத்தில் லட்சுமணன் வேடத்தில் நடித்து,
நாடக ஆசான் அவ்வை டி.கே.சண்முகத்தின் பாராட்டை பெற்றார்!

1944 பிப்ரவரி 11 இல்
நலிந்த கலைஞர்களின் நல்வாழ்வுக்காக போராட்டம் நடத்தி,
மக்களின் பேரன்பை பெற்று, *மக்கள் அன்பரானார்.

டி.வி.என் அவர்கள், பேரறிஞர் அவர்களுடன் நட்புறவு கொண்டார். சந்திரோதயம் நாடகத்தில் அண்ணா அவர்களுடன் சேர்ந்து டி.வி.என் சீர்திருத்த வாலிபனாக நடித்தார்.

நாடகக்கலை வேந்தன், நடிப்புச் சக்கரவர்த்தி
நடிகமணி டி.வி.என் அவர்களின், ஆற்றல்மிகு நடிப்பை
அண்ணா, பெரியார், கலைவாணர் என்.எஸ்.கே மூவரும் பார்த்தார்கள்! வியந்தார்கள்!!

முப்பெரும் அறிஞர்களும்,
நடிகமணி டிவியின் அவர்களை,
பாராட்டி மகிழ்ந்தார்கள்!,

அண்ணாவின்  ஓர் இரவு நாடகத்தின் ஐம்பதாவது நாள் விழாவில்,
“மேடைப் பேச்சாளனாக, எழுத்தாளனாக,
இருந்து வந்த எனக்கு, முதன் முதலில் கலை உலகை பற்றி சிந்திக்கத் தூண்டியவர், நடிகமணி டி.வி.நாராயணசாமி அவர்கள் தான், எனப் பெருமையோடு பாராட்டிய பேரறிஞர் அண்ணா.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் விழா ஒன்றில் பேசிய கவிஞர் கண்ணதாசன் அவர்கள், நடிகமணி டிவிஎன் அவர்களை, தனது அரசியல் குரு, வழிகாட்டி
என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பல நாடகங்களை எழுதி, வரலாறு படைத்த அண்ணா , *சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தை எழுதி, வரலாற்று நாயகன் நடிகமணி டி.வி.என் அவர்களிடம் கொடுத்து, “தம்பி உனக்காக ஒரு நாடகம் எழுதியுள்ளேன், படித்துப்பார்” என்றார் அண்ணா. இந்த நாடகம் நமது கொள்கை முரசாக விளங்குகிறது, விரைவில் அரங்கேற்ற வேண்டும் என்றார், டி.வி.என்.

உடனே அண்ணா, நாடகத்தைத் தயாரித்து வழங்கும் பொறுப்பையும், டி.வி.என் இடமே ஒப்படைத்தார், சிவாஜி வேடத்தில் நடிப்பதற்கு சிறந்ததொரு நடிகரை தேடிக் கொண்டிருந்தார், அப்போது அவருடன் பாசத்துடன் பழகிய, மக்கள் திலகம் எம்ஜி இராமச்சந்திரனை, அண்ணா அவர்களிடம் அழைத்துச் சென்று, சிவாஜி வேடத்தில் நடிப்பதற்கு பொருத்தமானவர், எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் தான், என்று அறிமுகப்படுத்தினார்.

சந்தர்ப்ப சூழ்நிலை, அந்த நாடகத்தில் எம்ஜிஆர் அவர்கள் நடிக்க முடியாமல் போனது, அப்போது, அண்ணாவின் திராவிட நாடு அலுவலகத்தில் தங்கியிருந்த, நாடக நடிகர் வி சி கணேசனை அழைத்துச் சென்று, சிவாஜி வேடத்திற்கு இவரை போடலாம் என்று அறிமுகப்படுத்தினார், டிவிஎன் அவர்கள்,

அதற்கு அண்ணா , “கணேசன் பெண் வேடம் போட்டு நடித்ததை பார்த்துள்ளேன்.. இந்த வேடத்திற்கு சரியா வருமா.. எனறு அண்ணா கேட்க..
அதற்கு டிவிஎன் அவர்கள், “கணேசனை தயார் படுத்தி விடலாம்” என்று அண்ணாவிடம் உறுதி அளித்தார்,

1945, டிசம்பர் 15ஆம்நாள் சென்னை ஜெயின் மேரிஸ் மண்டபத்தில், தந்தை பெரியார் தலைமையில் நடந்த நாடகத்திலிருந்து தான் கணேசன்.. சிவாஜி கணேசன் ஆனார்.

நசுக்கப்பட்ட நடிகர் வாழ்வு, நாடக உலகில் என்ற புத்தகங்களை எழுதி, எழுத்துக்கும் பெருமை சேர்த்தவர், பெருமையுள்ள டி.வி.என் அவர்கள்,

1946ம் ஆண்டு இலட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் உடன் பிறந்த தங்கை பாப்பம்மாளை கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்.
அதே மேடையில் அண்ணா அவர்கள் தலைமையில்,
எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களுக்கும், பங்கஜ குமாரி அவர்களுக்கும் திருமணம் நடந்தது சிறப்பு வாய்ந்தது.

துளி விஷம் , மணிமகுடம்  மற்றும் பல நாடகங்களில் நாடகத்தில் நடித்து, லட்சக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றார்,டி.வி.என்.

பராசக்தி, புதையல், சிவகங்கைச் சீமை, அல்லி, முதலிய திரைப் படங்கள், அவர் நடித்ததில் குறிப்பிடத் தக்கவையாகும்.

கலைஞரின் கைவண்ணத்தில் , லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களும், நடித்த *மணிமகுடம்*, லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் அவர்கள் நடித்த தங்கரத்தினம், இளையராஜா அவர்கள் இசையில், ஒளிப்பதிவாளர் அசோக் குமார் இயக்கத்தில் உருவான, *தம்பிக்கு ஒரு பாட்டு* முதலிய திரைப் படங்களையும் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1962 சட்டமன்ற தேர்த லில், மயிலாப்பூர் தொகுதியில், போட்டி யிடுவதற்கு கிடைத்த வாய்ப்பை,  வேண்டாம் என்று கூறியவர்.

தேனி தேர்தலில், தேனீயாய் உழைத்து, தேனினும் இனிய வெற்றியைப் பெற்றுத் தந்து,

உலக அளவில் அரசியலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டிய, சாதனையாளர் டி.வி.என்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்,
துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் என பதவிகள் ஏற்று, தென்னிந்திய நடிகர் சங்க வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தவர் நடிகமணி டி.வி.என்.

இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராக* தொடர்ந்து எட்டாண்டுகள் சிறப்பாக பணியாற்றி, நலிவுற்ற கலைஞர்களுக்கு பல நன்மைகளை செய்த சிறப்பின் சிகரமாக விளங்கியவர் டி.வி.என்.

நாடகத் துறையிலும், திரை துறையிலும், அரசியலிலும், 60 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்.

“இவன்தான் எம் ஜி இராமச்சந்திரன் என்று என்னை அறிஞர் அண்ணா அவர்களிடம் அறிமுகப்படுத்தியவர் டிவி நாராயணசாமி” அவர்கள் என்று மேடையில் புரட்சித் தலைவர் பேசியது பெருமைக் குரியது.

கழக மேடையில் ஏறிய முதல் நடிகன்.
கலையால் மக்களை சென்றடைய முடியும் என்று, அறிஞர் அண்ணா அவர்களுக்கு எடுத்துரைத்து, கலைத் துறையின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட, தூண்டு கோலாக இருந்தவர்.

அண்ணாவுக்கும் கலைஞருக்கும் பாலமாக விளங்கியவர் டி.விஎ.ன்.
கலை உலக தங்கங்களான, கே.ஆர்.ராமசாமி,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் முதலியவர்களை, அவ்வப்போது அண்ணா அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்து அவர்களுக்கு அரசியலில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அரசியலில் ஒரு புது திருப்புமுனையை உருவாக்கி, கலையின் ஆட்சி கான செய்தவர்
என்று சொன்னால் அது மிகையாகாது!

டிவிஎன் அவர்களின் முற்போக்கு சிந்தனைகள்
சாதனைகள்,  கடின உழைப்பு, புகழ் பெருமைகள் கொள்கை,லட்சியம் பொன் ஏடு களில் பொறிக்கப்பட வேண்டியவை,

நடிகை மணி டி.வி.என் அவர்களின் பேரும்,புகழும் யுகங்களைக் கடந்து நிலைத்து நிற்கும் இவரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

வருகிற 8ம் தேதி, சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் மாலை 4.30 மணி அளவில் விழா நடைபெறுகிறது.

திருமதி.பாரதி திருமகன் வில்லிசை நடக்க.. தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிறது.

டி.கே.எஸ்.கலைவாணன் தொகுப்புரை வழங்க,

ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த,

கி.வீரமணி விழாவுக்கு தலைமை தாங்க..,

பத்மா சுப்ரமணியம்,
விஜயா தாயன்பன்,
சி.பொன்னையன்,
எச்.வி.ஹண்டே,
ஆர்.எம்.கே.முனிரத்தினம்,
சைதை துரைசாமி,
நல்லி குப்புசாமி செட்டி,
சச்சு
இவர்கள் முன்னிலையில்..

நடிகமணி டி வி என் உருவ படத்தை, தி மு க செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் திறந்து வைக்கிறார்.

டி வி என் வாழ்க்கை வரலாறு முதல் நூலை கி.வீரமணி வெளியிட,
ஜி.விசுவநாதன் பெற்றுக் கொள்கிறார்.

விழா மலரை.. இயல் இசை நாடக மன்றம் தலைவர் வாகை சந்திரசேகர் வெளியிட,
முதல் பிரதியை, தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் எம்.நாசர் பெற்றுக் கொள்கிறார்.
இரண்டாவது பிரதியை, தென்னிந்திய நடிகர் சங்கம் இணை தலைவர் பூச்சி எச் முருகன் பெற்றுக் கொள்கிறார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்,
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
திருநாவுக்கரசு,
கோபண்ணா,
எம்.நாசர்,
டிரஸ்கி மருது
ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

டி.வி.என்.விஜய் நன்றி கூற..

நாட்டுப்பண் உடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

அனைவரையும் டி.வி.என். சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் டி.வி.என் குடும்பத்தினர் வறவேற்கிறார்கள். ஜான்சன், பி.ஆர்.ஓ பத்திரிகையாளர் ஒருங்கிணைப்பு செய்கிறார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...