முதல் தேசிய விருது பெற்றதும்  இசைஞானியிடம் ஆசிப்பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்

69வது தேசிய விருதுகளுக்கான அறிவிப்புகள் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்களுக்காக தேவிஸ்ரீ பிரசாத் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இது முதல் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னை விரைந்து வந்த தேவிஸ்ரீ பிரசாத் இளையராஜா காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இளையராஜா காலில் விழுந்த தேவிஸ்ரீ பிரசாத்: தெலுங்கில் 1999ம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவிஸ்ரீ பிரசாத். தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் வில்லு, கந்தசாமி, சிங்கம், குட்டி, மழை உட்பட மேலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது சூர்யாவின் கங்குவா படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் புஷ்பா 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் 2022 இறுதியில் வெளியானது புஷ்பா முதல் பாகம். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு சூப்பர் ஹிட்டும் அடித்தன. இந்நிலையில் புஷ்பா படத்தின் பாடல்களுக்காக தேவிஸ்ரீ பிரசாத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புஷ்பா பாடல்கள் கமர்சியலாக ஹிட்டானாலும் அவை எதுவுமே தேசிய விருதுக்கு தகுதியானது இல்லை என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே முதல் தேசிய விருது வென்றுள்ள தேவிஸ்ரீ பிரசாத், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். சூர்யாவின் கங்குவா, அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இருப்பினும் தேசிய விருது வென்ற மகிழ்ச்சியை கொண்டாட சென்னைக்கு பறந்து வந்துவிட்டார். அதாவது நேராக இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குச் சென்ற தேவி ஸ்ரீ பிரசாத், இசைஞானியின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இளையராஜாவிடம் தேவிஸ்ரீ பிரசாத் ஆசி வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இளையராஜாவின் வெறித்தனமான ரசிகர்களில் தேவிஸ்ரீ பிரசாத்தும் ஒருவர். முன்னதாக ஒரு நிகழ்ச்சியின் போது, இளையராஜாவுக்குப் பின்னர் அவரது வாரிசாக தேவிஸ்ரீ பிரசாத்தை பார்க்கிறேன் என கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, கமலையும் தேவிஸ்ரீ பிரசாத்தையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் இப்போது இளையராஜாவின் காலில் விழுந்து தேவிஸ்ரீ பிரசாத் வாழ்த்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!