வெற்றிக்கு காரணம் ரஜினி சாரின் பவர் – ஜெயிலர் பட விழாவில் நெல்சன் நெகிழ்ச்சி !

 வெற்றிக்கு காரணம் ரஜினி சாரின் பவர் – ஜெயிலர் பட விழாவில் நெல்சன் நெகிழ்ச்சி !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான தினத்தில் இருந்து இப்போதுவரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த படத்தின் வெற்றி நடை தொடர்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை பரிசளித்ததற்காக பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும்விதமாக ‘ஜெயிலர்’ படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அதில் நெல்சன் உட்பட பலரும் பேசினார்கள் .

இயக்குநர் நெல்சன் பேசும்போது, “இந்த வெற்றிக்கு காரணம் ரஜினி சாரின் பவர், ஆரா மற்றும் அவரது ரசிகர்கள்தான். ஒளிப்பதிவாளர். விஜய் கார்த்திக் கண்ணன் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். இதற்காக ஏதோ சித்த வைத்தியம் பார்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரும் ரஜினி சாரின் ரசிகன்தான் என்றாலும் சில விஷயங்களை நம்புகிற மாதிரி இல்லை என்றால் அதை ஓப்பனாக சொல்லி விடுவார். இந்தப் படத்தில் அதிக நேரம் பணியாற்றியது என்றால் அது படத் தொகுப்பாளர் நிர்மலாகத்தான் இருக்கும். படம் ரிலீஸ் ஆகின்ற தினத்தில்கூட ஏதாவது ஒரு படத்திற்காக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதேபோல கலை இயக்குநர் கிரண் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என கேட்டார். ஆனால் அவரின் முழு கவனத்தையும் செட்டின் மீது செலுத்துங்கள் என கூறிவிட்டேன். கோபத்தில் ஏதாவது குறை வைத்து விடுவாரோ என நினைத்தேன். ஆனால், அற்புதமாக தனது வேலையை பார்த்துள்ளார். ‘கோலமாவு கோகிலா’ படத்திலிருந்து ‘ஸ்டன்’ சிவா மாஸ்டர் என்னை பாலோ செய்து வருகிறார். அதன் பிறகுதான் அவர் பணியாற்றிய படங்களை பார்த்தேன். உடனே ‘ஜெயிலர்’ படத்தில் அவரை பணியாற்ற இணைத்துக்கொண்டேன். படப்பிடிப்பிற்கு அவர் மட்டுமல்ல… அவரது இரண்டு பையன்களும் இணைந்து வந்து பணியாற்றினார்கள்.

ஜானி மாஸ்டருடன் நான்காவது முறையாக இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளேன். அவர் வடிவமைத்த ‘காவாலா’ பாடல் படத்திற்கு மிகப் பெரிய புரமோஷன் ஆக அமைந்தது. நடிகர் சுனில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஒப்புக் கொண்டு நடித்ததுடன் சிறப்பாக நடித்தாலும்கூட, “இன்னொரு முறை டேக் போலாகலாமா?” என ஆர்வமுடன் கேட்பார். எனக்காக ஒரு டேக்கும், அவருக்காக ஒரு டேக்கும்கூட சில நேரங்களில் எடுத்துக் கொண்டு அவற்றில் எது சிறப்பாக இருந்ததோ அதை பயன்படுத்தினோம்.

இந்த படத்தில் மிர்னா நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக முதலில் ஐந்து, ஆறு பேரிடம் பேசினோம். ஆனால் மிர்னாவின் நடிப்பை பார்த்ததும் வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய யோசிக்கவில்லை. இந்தப்படத்தில் குறைந்த டேக் வாங்கி நடித்தவர்களில் மிர்னாவும் ஒருவர்.   இந்தப் படத்திற்காக ‘ஹுக்கூம்’ பாடல் எழுதப்பட்டு என்னிடம் வந்தபோது, “இதை எழுதியவர் யாரோ ஒரு ரஜினி ரசிகர் மன்ற தலைவர்தானே..?” என்று அனிருத்திடம் கேட்டேன். அந்த அளவிற்கு ஒரு அதிரடி பாடலாக இதை உருவாக்கி இருந்தார். என்னுடைய முதல் படத்திலிருந்து இடம் பிடித்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி. அவர் வரவில்லை என்று கூறினாலும் ஓல்டு சென்டிமென்ட் பேசி பிளாக்மெயில் செய்து வர வைப்பேன். ஆனால், படத்திற்குள் வந்த பிறகு நம்மை அவர் பிளாக்மெயில் செய்வார். கதை விவாதங்களில்கூட வந்து கலந்து கொள்வார். ஆனால் தேவையில்லாமல் ஏதாவது சொல்லி கோபித்துக் கொண்டு செல்வார்.

சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பு பொறுப்புகளை கண்ணன் மற்றும் செம்பியன் இருவருமே எடுத்துக் கொண்டார்கள். கலாநிதி மாறன் சாரிடம் ஒற்றை வரியில் கதை சொல்லி தப்பித்து விடலாம் என நினைத்தால் அவரோ இரண்டரை மணி நேரம் அல்ல… 5 மணி நேரம் வரைகூட பொறுமையாக அமர்ந்து கதை கேட்பார். இந்தப் படத்தை தனது இதயத்திற்கு நெருக்கமாக நினைத்தார் கலாநிதி மாறன். இந்தப் படத்தை ரசிகர்கள் இவ்வளவு கொண்டாட காரணம் ரஜினி சார்தான். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார் ரஜினி ஸார். படம் பார்த்துவிட்டு, “நான் நினைத்ததை விட பத்து மடங்கு நல்லா வந்திருக்கு..” என்று பாராட்டினார். நிறைய பேர் என்னை சந்தேகமாக பார்த்தபோது ரஜினி சார் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார்.

இந்தப் படம் இங்கே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இப்போது இமயமலையில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் வந்ததும் அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்.  இந்தப் படத்தில் ரஜினி சாரின் கண்களை அதிகளவு குளோசப் காட்சிகளில் பயன்படுத்தி இருந்தோம். அதற்கு காரணம் எப்போதுமே அவர் நம்மை நோக்கி பார்க்கும்போது அவரது கண்களின் பார்வை தீர்க்கமாக இருக்கும்.. நான் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும் இதை என்னிடம் கூறி ரஜினி சாரின் கண்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வைக்க விரும்பினார். படத்தில் அந்த காட்சிகளை பின்னணி இசையுடன் பார்க்கும்போது மாஸாக இருந்தது..” என்று கூறினார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...