மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை!

மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரையில் 77 லட்சம் பேர் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் ஆகஸ்ட் 6 முதல் துவங்குகிறது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்கிறார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை தமிழக அரசின் மூலம் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு முதல் கட்டமாக ரூ.1000 வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள் மூலம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவு செய்ய வசதியாக சிறப்பு முகாம்கள் 3 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் கடந்த மாதம் 2-ந்தேி முதல் தொடங்கியது. வீடு வீடாக சென்று படிவங்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பப் பதிவு கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (4-ந்தேதியுடன்) முதல் கட்ட முகாம்கள் நிறைவு பெறுகிறது.

இதுவரையில் 77 லட்சம் பேர் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். நகரம் மற்றும் கிராமப் பகுதிகளை தனித்தனியாக பிரித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

முதல் கட்ட சிறப்பு முகாம்களில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்து விட்ட நிலையில் 2வது கட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் 5-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த முகாம் 16-ந்தேதி வரை நடக்கிறது. 3வது கட்டமாக விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த முகாம்கள் 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. 1428 ரேசன் கடைகளில் முதல் கட்டமாக 704 கடைகளுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன.

இதற்கான விண்ணப்பப் படிவம் 20-ம் தேதி முதல் வழங்கப்பட்டன. 1730 சிறப்பு முகாம்களில் 2266 பயோமெட்ரிக் கருவிகள் மூலம் குடும்பத் தலைவியின் படிவங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சிறப்பு முகாம்கள் நாளையுடன் (4-ந்தேதி) முடிகிறது.

நேற்று வரை 6 லட்சத்து 24 ஆயிரத்து 116 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 561 குடும்பத் தலைவிகள் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. முகாம்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 31-ந்தேதி 19,771 பேரும், 1-ந்தேதி 14,333 பேரும் நேற்று 12,235 பேரும் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் 2-வது கட்ட சிறப்பு முகாம்கள் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது. 724 ரேசன் கடை பகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கான முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 102 வார்டுகளில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!