இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் அதிரடி

 இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் அதிரடி

இங்கிலாந்து வரலாற்றில் 57வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இங்கிலாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ரிஷி சுனக் உலக நாடுகள் முன்னிலையில் கவனத்தைப் பெற்றுள்ளார்.

ஒரு காலத்தில் நம்மை ஆண்ட வெள்ளைக்கார நாட்டை இன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் குறைந்த வயதிலேயே ஆள்கிறார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதுவும் இங்கிலாந்து வரலாற்றில் 200 ஆண்டுகளில் குறைந்த (47) வயதுடைய பிரதமர் என்கிற சிறப்பை ரிஷி சுனக் பெற்றிருக்கிறார்.

இங்கிலாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக் முன்பு முக்கிய பிரச்சினைகள் சூழ்ந்துள்ளன.

இங்கிலாந்தின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்கவேண்டும். அங்கு பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக 10 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும். வரி விதிப்பில் சிக்கல்  ஏற்பட்டுள்ளதைச் சரி செய்யவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ரிஷி முன் நிற்கின்றன. அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

ரிஷி சுனக் பிரதமர் தேர்வுக்கு முன்னால் நடந்தது என்ன?

போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் ரிஷி சுனக் நிதி அமைச்சராக இருந்தார். போரிஸ் ஜான்சன் அரசு விதிமுறைகளை மீறியதால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரிஷி சுனக் மந்திரி பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து பல மந்திரிகள் விலகியதால் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து புதிய பிரதமருக்கான இறுதிச் சுற்றில் லிஸ்டிரஸ் வெற்றி பெற்றார்.

இங்கிலாந்து பிரதமராகப் பதவியேற்ற லிஸ்டிரஸ் ஒன்றரை மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அக்டோபர் 20ஆம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க போரிஸ் எடுத்த நடவடிக்கைகளுக்கு சொந்தக் கட்சி எம்.பி.க்களே எதிர்ப்புத் தெரிவித்தால் பதவி விலகினார்.

இதையடுத்து புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. இங்கிலாந்தில் ஆளும் கட்சித் தலைவர்தான் பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பெண் தலைவரான பென்னி மார்டண்ட் ஆகியோர் போட்டியிட முடிவு செய்து எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டினர்.

357 எம்.பி.க்கள் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியில் ரிஷி சுனக்குக்கு அமோக ஆதரவு கிடைத்தது. அவருக்கு 140க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். 100 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையில் போரிஸ் ஜான்சனுக்கு 51 எம்.பி.க்களும், பென்னி மார்டண்ட்டுக்கு 27 எம்பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதேவேளையில் வேட்புமனு தாக்கல் கால அவகாசம் முடிய சில மணி நேரங்களுக்கு முன்னதாக போரிஸ் ஜான்சன் தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதேபோல் பென்னி மார்டண்ட்டும் போட்டியிலிருந்து விலகினார்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆனார். தனது இரண்டாவது முயற்சியில் இங்கிலாந்து பிரதமராகப் பதவியைக் கைப்பற்றினார் சுனக்.

ரிஷி சுனக் இந்திய வம்சாவளி ஆனது எப்படி?

ரிஷி சுனக்கின் தாய், தந்தை இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் அடிக்கடி பெங்களூருவுக்கு வருவார். தனது பாரம்பரியத்தைப் பற்றி அடிக்கடி பேசுவாராம்.

இங்கிலாந்தில் பிறந்த ரிஷி சுனக் 2001ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட லிங்கோல்ன் கல்லூரியில் தத்துவம், அரசியல், பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றார்.

கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து அரசியல் பணியிலும் ஈடுபட்டார். 2006ஆம் ஆண்டு ஸ்டண்ட் பேபார்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற அவர் ஒரு வங்கியில் ஆலோசகராகப் பணியில் சேர்ந்தார்.

2014ஆம் ஆண்டு முதல் யார்க் ஷைன் மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

2015, 2017ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் பொருளாதாரத் தலைமைச் செயலாளராக நியமித்தார்.

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தின் உயரிய பதவியான கருவூலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 

இந்தியாவின் மருமகன்

இங்கிலாந்தின் புதிய பிரதமரான ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவன உரிமையாளர் நாராயணமூர்த்தியின் மருமகன். இவர் இங்கிலாந்தில் நாராணயமூர்த்திக்குச் சொந்தமான கேட்டர்மாரன் வென்சர்ஸ் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியில் சேர்ந்தார். ரிஷி சுனக்குக்கும் நாராணயமூர்த்தியின் மகள் அகதாவுக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அனுஷ்கா, கிருஷ்ணா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

ரிஷி சுனக்கின் மனைவி அகதாவுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளை அவரது தந்தை நாராயணமூர்த்தி வழங்கி உள்ளார். இதன் மதிப்பு ரூ.5,780 கோடி. இது மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் சொத்து மதிப்பைவிட அதிகம். இளவரசர் மூன்றாம் சார்லஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2,850 கோடிதான்!

இங்கிலாந்தின் பணக்கார எம்.பி.க்களில் ஒருவராகக் கருதப்படும் ரிஷி சுனக் இதுவரை அவர் தனது சொத்து மதிப்பு குறித்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை அதிரடி மாற்றம்

நேற்று (25-10-2022) பிரிட்டன் மூன்றாம் சார்லஸை சந்தித்து பிரதமர் பொறுப்பேற்ற ரிஷி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்த நிலையில் ரிஷி தனது அமைச்சரவையை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். முந்தைய பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நான்கு மந்திரிகளைப் பதவி விலகுமாறு ரிஷி கேட்டுக்கொண்டார்.

அதேபோல் வரும் நாட்களில் ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுனக் “தவறுகளைச் சரி செய்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே என் இலக்கு” என்று தெரிவித்தார். பொறுத்திருந்து பார்ப்போம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...