ப்ரியா கல்யாணராமன் மறைவு பத்திரிகை உலகுக்கு இழப்பு

 ப்ரியா கல்யாணராமன் மறைவு பத்திரிகை உலகுக்கு இழப்பு

குமுதம் வார இதழில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் ப்ரியா கல்யாணராமன் (வயது 56). இவர் இன்று மாலை சென்னையில் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பத்திரிகை உலகில் மட்டுமல்லாமல் பொது வெளியிலும் பெரிய துயரத்தை ஏற்படுத்தியது.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்த ப்ரியா கல்யாணராமனின் இயற்பெயர் ராமச்சந்திரன். அவரது மனைவி ராஜ சியாமளா ஒரு எழுத்தாளர். ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

குமுதம் வார இதழில் தமது 21ஆம் வயதிலேயே பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.யால் பத்திரிகை உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர் ப்ரியா கல்யாணராமன்.

இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏராளமான நாவல்களை எழுதிக் குவித்தவர் .  தற்போது குமுதத்தில் ஆண்டாள் என்கிற தலைப்பில் 200 தொடர்களுக்கும் எழுதி வந்தார். ஆன்மிகத் துறையில் பல நூல்களை எழுதியுள்ளார். தனது இதழியல் வாழ்க்கையையினைத் தொடங்கிய காலம் தொட்டே, ஆன்மிகம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவது, அது குறித்து கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதி ஆன்மிகக் கட்டுரைகளுக்கு என தனி கவனம் பெற்றார். இவர் ஆண்டவன் உங்கள் அருகில், தெற்கத்தி தெய்வங்கள், யாத்திரை போகலாம் வாங்க, கோவில் சொல்லும் கதைகள் என மொத்தம் 22 புத்தகங்களை எழுதியுள்ளார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகை உலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.

ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மூத்த ஊடகவியலாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

முப்பதாண்டுகளாக குமுதம் இதழில் பணியாற்றி வந்த அவர் பல நூல்களை எழுதியிருப்பதுடன், பல எழுத்தாளர்களையும் ஊக்குவித்தவர் என்பதை ஊடக உலகினர் நன்கறிவார்கள். குமுதம் இதழைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி வந்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரியா கல்யாணராமனின் திடீர் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும், குமுதம் நிறுவனப் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இவரது திடீர் மரணம் குடும்பத்தினர், குமுதம் இதழின் குழுவினர், நண்பர்கள் மற்றும் அவரது வாசகர்கள் என அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...