பார்வையற்ற மதுரை பூர்ண சுந்தரி: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

 பார்வையற்ற மதுரை பூர்ண சுந்தரி: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

ஐ.ஏ.எஸ்., தேர்வில், மதுரையைச் சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரை, மணி நகரத்தைச் சேர்ந்தவர், பூர்ண சுந்தரி. 25 வயதாகும் இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. இவரது தந்தை முருகேசன், விற்பனை பிரதிநிதி; தாயார் ஆவுடைதேவி, இல்லத்தரசி.

தனது வெற்றி தொடர்பாக பூர்ண சுந்தரி கூறுகையில், முதல் வகுப்பு படிக்கும் போதே, பார்வை குறைபாடு ஏற்பட்டது. 2வது படிக்கும் போது, அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.விழிகள் போனால் என்ன? கல்வி என்ற ஒளியால் மகளை வழி நடத்துவோம் என, பெற்றோர், எனக்கு பாடங்களை வாசித்து காட்டுவர். பழைய டேப்ரிக்கார்டரில் பாடங்களை பேசி, ஒலிக்க விட்டு, படிக்க வைத்தனர்.

பள்ளி, கல்லுாரி தேர்வுகளின் போது நான் சொல்ல, சொல்ல ஆசிரியர்கள் தேர்வெழுதுவர். பிள்ளைமார் சங்க பள்ளியில் பிளஸ் 2 வரையும், பாத்திமா கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலமும் படித்தேன். மூன்று ஆண்டுகளாக, பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறேன்.

கடந்த, 2015ல் கல்லுாரி படிப்பு முடிந்ததும், சென்னை சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்றேன். பயிற்சியின் போது, தோழிகள் பாடங்களை வாசித்து காட்டுவர்.தற்போது, நான்காவது முறை எழுதிய தேர்வில், அகில இந்திய அளவில், 286வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.

என் பிறந்த நாளில், தேர்ச்சி பெற்ற தகவல் கிடைத்தது மகிழ்ச்சி.சாதாரண குடும்பத்தில் வறுமையின் வலியை உணர்ந்து பிறந்து, வளர்ந்த நான், ஏழை, எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...