திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.ரவிச்சந்திரா பதவியேற்றார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில் குமார் சிங்கால் பதவி வகித்து வந்தார். இவர் முந்தைய ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்த கலப்பட நெய் விவகாரத்தில் அப்போதைய அறங்காவலர் குழு தீர்மானங்களை தடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடித்தார் என சிறப்பு புலனாய்வு குழு கருத்து தெரிவித்தது. இதன் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அமராவதியில் சிஎம்ஓ அலுவலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முக்கிய செயலாளராக பணியில் இருந்த எம்.ரவிச்சந்திரா, திருப்பதி தேவஸ்தான புதிய நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவர் நேற்று பதவியேற்றார்.

முன்னதாக அவர் தனது மனைவியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தார்.
புதிய நிர்வாக அதிகாரி: ரவிச்சந்திரா பேசுகையில், “தேவஸ்தானஅறங்காவலர் குழு, மூத்த அதிகாரிகள் மற்றும் பக்தர்களின் கருத்துகளை கேட்டறிந்து, பக்தர்களின் மனம் புண்படாத வகையில் செயல்படுவேன். ஏழுமலை
யானுக்கு சேவை செய்யும் இந்த பாக்கியத்தை வழங்கிய ஆந்திர முதல்வருக்கு மனதார நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
இவர் ஏற்கனவே ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். திருப்பதி தேவஸ்தானம் குறித்தும் அதன் நிர்வாகம் குறித்தும் நன்றாக அறிந்தவர் ஆவார்.
