பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூர், நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். திட்டம் தொடங்கி வைத்த உடன், இன்றைய தினமே அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன்கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான அரிசி மற்றும் சர்க்கரை 100 சதவீதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு வினியோகிக்கப்பட்ட வேட்டி-சேலைகளில் 80 சதவீதம் மட்டுமே மக்களால் நுகர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் நுகர்வு செய்யப்பட்ட வேட்டி-சேலைகளில் 100 சதவீதம் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நுகர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், எஞ்சிய வேட்டி-சேலைகள் குடோன்களில் இருப்பு இருப்பதாகவும் தேவைப்படும் ரேஷன் கடைகளுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதேபோன்று, முழு கரும்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 50 முதல் 80 சதவீதம் கரும்புகள் நகர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், கரும்பை பசுமையாக வழங்கும் நோக்கத்தில் இது போன்று வினியோகம் செய்யப்படுவதாகவும், தொடர்ந்து தேவையான அளவு கரும்புகள் மாவட்ட நிர்வாக குழுக்களால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு பசுமையாகவே வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இருக்கும் பகுதிக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.3 ஆயிரம் ரொக்கத் தொகையை பயனாளிகள் முன்பு எண்ணி வெளிப்படையாக வழங்க வேண்டும் என்றும், பொங்கல் பண்டிகை வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலைவாழ் பகுதி மக்கள் அதிகாலையிலேயே வேலைக்கு கிளம்புவதால், மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. டோக்கன் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பொங்கல் பரிசு தொகுப்புகளை அவர்கள் குறிப்பிடும் நாட்களில் வந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!