முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பணவீக்கம் மற்றும் ரயில்வே பராமரிப்புச் செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதாவது, குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத முன்பதிவு பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசுகள் வீதமும், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேஜஸ், சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், அந்தியோதியா, வந்தே மெட்ரோ, அம்ரித் பாரத் உள்ளிட்ட ரெயில்களிலும் கட்டணம் உயருகிறது.நேற்று வரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. இன்று (26-ந்தேதி) முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் புதிய கட்டணம் பொருந்தும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு மூலம் ரெயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, அன்றாட செலவுகள் என பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வரும் பொதுமக்களுக்கு இந்த கட்டண உயர்வு கூடுதல் சுமையாகவே பார்க்கப்படுகிறது.
