மும்பை,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் (வயது 90). இவர் 2004 முதல் 2008 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார். அதேபோல், இந்தியா காந்தி, ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுகளில் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். மேலும், 1991 முதல் 1996 வரை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகவும், 2010 முதல் 2015வரை பஞ்சாப் மாநில கவர்னராகவும் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். மராட்டியத்தின் லட்டூரில் உள்ள வீட்டில் சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மூத்த அரசியல் தலைவர் சிவராஜ் பாட்டீலை நாம் இழந்துவிட்டோம். சிவராஜ் தனது நீண்ட பொதுவாழ்வில் மக்களவை சபாநாயகர், மத்திய மந்திரி, கவர்னர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், சிவராஜ் பாட்டீல் மறைவால் மிகுந்த சோகமடைந்தேன். மிகவும் நீண்ட காலம் அரசியல் அனுபவம் பெற்ற அவர் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய மந்திரி, மராட்டிய சபாநாயகர், மக்களவை சபாநாயகர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
