உருவானது ‘மோந்தா’ புயல்: சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு..!’

மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வட கிழக்கு திசையில் மோந்தா புயல் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டு இருக்கிறது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வட கிழக்கு திசையில் மோந்தா புயல் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு 640 கி.மீ. தொலைவில் மோந்தா புயல் மையம் நிலை கொண்டுள்ளது. இது நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும்.

பசிபிக் உயர் அழுத்த பிடியால் மேற்கு – வடமேற்கு திசையில் இன்று இரவு புயல் நகரத்தொடங்கும். பின்னர், இமயமலையில் இருக்கக்கூடிய மேற்கத்திய தாழ்வு நிலை புயலை தன்பக்கமாக இழுக்கும்.

இந்த இருவேறு வானிலை நிகழ்வுகளால், வளிமண்டலத்தில் காற்று முறிவு ஏற்பட்டு வடக்கு – வடமேற்கு திசையில் ஆந்திராவின் காக்கிநாடாவை நோக்கி தீவிர புயலாக நகரும். ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கரையை நெருங்கும்போது புயல் வலுவிழக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வளிமண்டலத்தில் காற்று முறிவு ஏற்படுவதால் ஆந்திராவில் காற்று பாதிப்பு இருக்காது என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஆந்திராவின் ஓங்கோல் முதல் நெல்லூர் வரையிலான தெற்கு ஆந்திர பகுதியில் மிக கனமழையும், குறுகிய நேரத்தில் அதி கனமழையும் பதிவாகக்கூடும்.

ஆந்திராவுக்கு புயல் செல்வதால், தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு இருக்காதோ? என்ற பேச்சு இருக்கிறது. ஆனால் வட மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூரில் கனமழை

குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும். புயல் சென்னைக்கு நேராக அதாவது கிழக்கு பகுதியில் அதன் மேகக்கூட்டங்கள் வந்து நின்று, பின்னர் மேல் நோக்கி ஆந்திராவை நோக்கி நகரப்போகிறது. இதனால் இந்த புயல் காரணமாக மழை இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணியில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, விட்டு விட்டு கனமழையும், சென்னை, திருவள்ளூரில் அனேக இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

மழை இருக்கும் அதே நேரத்தில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தரைக்காற்று வடக்கு – வடமேற்கு நோக்கி 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை வரை சூறாவளி காற்று மணிக்கு 80 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலும், ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று இன்று முதல் நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை வரை 80 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையிலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயல் காரணமாக வட மாவட்டங்களில் மழை கிடைக்க இருக்கிறது. இதுதவிர பிற பகுதிகளில் வெப்பசலனம், பருவமழை காரணமாக இரவு அல்லது அதிகாலையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவாகிய ‘நிவர்’ புயல், மாமல்லபுரத்துக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் தீவிர புயலாக கரையை கடந்தது. அந்த நேரத்தில் கடலூர் – விழுப்புரம் இடையே 6 மணி நேரத்தில் 33 செ.மீ. மழையை கொட்டியது.

அதேபோல்தான், வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவை நோக்கி செல்லும் ‘மோந்தா’ புயலும் ஓங்கோல்-நெல்லூர் இடையே குறுகிய நேரத்தில் அதி கனமழை பெய்ய இருக்கிறது. ‘மோந்தா’ புயலில் நடக்கும் காற்று முறிவு நிகழ்வும் நிவர் புயலின்போது நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த குறுகிய நேரத்தில் அதி கனமழை கடைசி நேரத்தில் இடம் மாறவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி மாறும்பட்சத்தில் தமிழகத்தில் வடமாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மழை கொட்டவும் ஒரு வாய்ப்புள்ளது. இது புயல் வடமாவட்டங்களை நெருங்கிவரும் நேரத்தில்தான் கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!